TamilSaaga

“சிங்கப்பூரில் இருவர் கைது” : சிக்கியது 1,67,000 வெள்ளி மதிப்புள்ள 1.8 கிலோ ஹெராயின் – கடுமையாக எச்சரிக்கும் CNB

சிங்கப்பூரில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை பிற்பகல் சிராங்கூன் அவென்யூ 4-ல் உள்ள குடியிருப்புப் பிரிவில் அதிகாரிகள் சோதனை நடத்தி 37 வயது சிங்கப்பூரர் ஒருவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 44 கிராம் ஹெரோயின் மற்றும் பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் வந்து ஹோட்டல்களில் தங்கும்போது தொற்று உறுதியானால் என்ன செய்வது?

மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 1.8 கிலோ எடையுள்ள நான்கு ஹெரோயின் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. புதன்கிழமை நடந்த சோதனையை தொடர்ந்து இன்று வியாழன் அதிகாலையில் நடந்த தொடர் நடவடிக்கையில், CNB அதிகாரிகள் அதே பகுதியில் 59 வயது சிங்கப்பூரர் ஒருவரைக் கைது செய்தனர். அந்த நபரிடம் 216 கிராம் ICE, 68 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 12 எரிமின்-5 மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட அனைத்து மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் $167,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்க G பிரிவின் கட்டளை அதிகாரியான கண்காணிப்பாளர் லிம் ஸ்ஸே யுக் கூறுகையில், சிங்கப்பூரில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், வைத்திருப்பது, நுகர்வு மற்றும் இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன என்று எச்சரித்தார். “போதைப் பொருட்கள் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும், அடிமையாக்கும், மேலும் உயிர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை அழிக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.

“CNB அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான அமலாக்கத்தை மேற்கொள்வார்கள் மற்றும் சிங்கப்பூர் தெருக்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சிண்டிகேட்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள்” என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts