TamilSaaga

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள தமிழக சுவாமி சிலைகள் மீட்பு – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தமிழக சுவாமி சிலைகளை மீட்கும் நடவடிக்கை துவங்கி உள்ளது. எங்கெல்லாம் தமிழக ஆலயங்களில் உள்ள சிலைகள் இருக்கிறதோ அவை எல்லாவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களை ஆய்வு செய்வதற்காக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். கோவிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் தெப்பகுளம், தேர்களை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர்பாபு கூறும்போது.

“சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தமிழக கோவில்களில் சிலைகளை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர டிஜிபி மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.”

இதனை அடுத்து தமிழக முதல்வரின் ஒப்புதல் பெற்று வெளிநாடுகளில் உள்ள தமிழக சுவாமி சிலைகளை கொண்டு வர நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதேபோன்று தமிழக கோயில்களுக்கு சொந்தமான நகைகள் மற்றும் சுவாமி சிலைகள் பிற மாநிலங்களில் உள்ளன அவற்றையும் உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

Related posts