TamilSaaga

பல கனவுடன் சிங்கப்பூருக்கு வரும் தொழிலாளிகள்… வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கையை வீணடிக்கும் சோகம்!

சிங்கப்பூரில் வேலை பார்த்தால் லட்ச லட்சமாக சம்பாதித்து விடலாம் என்ற கனவில் பலரும் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களே ஏராளம். சிங்கப்பூர் செல்ல வேண்டுமானால் ஏஜென்ட்க்கு லட்சம் ஆக பணத்தை கட்ட வேண்டும் என்பதை அறிந்து, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து, கடன்களை வாங்கி தங்கள் பிள்ளைகளை சிங்கப்பூருக்கு அனுப்பும் பெற்றோர்களை ஏராளம்.

எப்படியாவது, நம் பிள்ளையும் சமுதாயத்தில் மதிக்கப்படும் அளவிற்கு பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற ஆசையில்தான் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்த சேமிப்பை முதலீடாக சிங்கப்பூர் ஏஜெண்டிடம் தருகிறார்கள். அவ்வாறு சிங்கப்பூருக்கு வரும் எல்லா தொழிலாளர்களும் பொருளாதார அளவில் திருப்தி அடைகின்றார்களா என்றார் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

குறிப்பாக ஒர்க் பர்மீட்டில் வேலை பார்ப்பவர்கள் சொற்ப சம்பளத்திலேயே வேலை பார்ப்பதால், சம்பளத்தில் பாதி சாப்பாடு மற்றும் தங்குவதற்கு செலவழிக்கும் இல்லை ஏற்பட்டுள்ளது. அதையும் மீறி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு வர வேண்டும் என்றால், உறவினர்களுக்கு எல்லாம் சேர்த்து பெருமளவு பொருட்கள் வாங்கி வந்தால் தான் குடும்பத்தில் கௌரவம். இல்லையென்றால் சிங்கப்பூரிலிருந்து என்ன வாங்கி வந்தாய் என்று கேள்வி கேட்டே நம்மளை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்.

இப்படி எதிர்பாராத விதமாக வரும் செலவுகளை சமாளிக்க சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதிக வட்டிக்கு பணத்தை கடனாக பெறுகின்றார்கள் எந்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிங்கப்பூரில் உடன் பணி புரியும் நண்பர்களிடம் வட்டிக்கு வாங்குவது அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களிடமும் வட்டிக்கு வாங்கும் நிலைக்கு சிலர் ஆளாகின்றனர். அப்படி வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு பைசா வட்டிக்கு கடன் வாங்குகின்றனர் என்பது தான் அரிசிக்குரிய விஷயம். அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 7000 ரூபாய் வடிகட்டுகின்றனர். அப்படி பார்த்தால், ஒரு வருடத்திற்குள் கிட்டத்தட்ட அவர்கள் வாங்கிய அசலையே வட்டியாக கட்டுகிறார்கள்.

அவசரத்திற்கு கடன் வாங்கி விட்டு, பின்பு விழி பிதுங்கி நிற்கும் தொழிலாளிகள் சிங்கப்பூரில் ஏராளம். எனவே, சிங்கப்பூரை பொறுத்தவரை நாம் வேலை செய்ய தான் சென்றிருக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு முதலில் முழுக்கு போட வேண்டும். சிங்கப்பூரில் சிக்கனமாக வாழ்ந்தால்தான், சொந்த ஊரில் சிங்கமாக வாழ முடியும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, தமிழக நண்பர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் இம்மாதிரியான சிக்கல்களில் மாட்டாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

Related posts