இந்த செய்தியை படிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இது இன்ஸ்பிரேஷனாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சிங்கப்பூரில் டாக்சி டிரைவராக இருந்து இன்று லட்சங்களில் சம்பாதிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக முன்னேறியிருக்கிறார் கஸாலி அகமது.
ஏதோ சிறிய வயதுக்காரர் என்று நினைத்துவிட வேண்டாம். கஸாலிக்கு தற்போது 53 வயதாகிறது. பல வருடங்களாக சிங்கப்பூரில் டாக்சி ஓட்டி வந்தவருக்கு, எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற பொறி உள்ளுக்குள் சுடர் விட்டுக் கொண்டே இருந்தது.
டாக்சி டிரைவர் வேலையில் திருப்தியும் இல்லாமல், தனது வாழ்க்கை இந்த டாக்சியிலேயே சிக்கிக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் இருந்த கஸாலிக்கு, ‘ஒன்பது மாதங்களில் மென்பொருள் பொறியாளர் பணிக்காக அவருக்கு பயிற்சி அளிப்பதாக உறுதியளித்த திட்டத்தில் சேர 2021 மார்ச்சில் முடிவு செய்துவிட்டார்.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2023/04/kasasli-original.jpg)
2019 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட, திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான “ஜெனரேஷன் சிங்கப்பூர்” நடத்திய மென்போருள் பயிற்சி திட்டத்தில் கஸாலி சேர்ந்தார். அந்த முடிவு அவர் வாழ்க்கையையே தற்போது மாற்றிவிட்டது.
இந்த ஜெனரேஷன் சிங்கப்பூர் நிறுவனம் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தி வருகிறது. படித்திருக்கும் ஒருவர் எந்த வேலையும் கிடைக்காமல் இருந்தால், அவரைப் போன்றவர்களை தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, நிறுவனங்களில் வேலைக்கு அமர இந்த அமைப்பு உதவுகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் இந்தியா போன்ற 17 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தியாவிலும் இது இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. (நோட் பண்ணிக்கோங்க மக்களே!)
சிங்கப்பூரில், புரோகிராமிங் அல்லது healthcare administration போன்ற திறன்களைக் வளர்க்கும் பயிற்சிகளை அளித்து, நிறுவனங்களில் வேலைக்கு சேர உதவுகிறது.
இந்த சூழலில் தான், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ள கஸாலி, மூன்று மாத தீவிர பயிற்சி அடங்கிய bootcamp-style course படிப்பில் சேர்ந்தார், அதைத் தொடர்ந்து ஆறு மாத பயிற்சி பெற்றார்.
அந்த பயிற்சியின் போது, அவருடன் படித்த மற்ற மாணவர்கள் எல்லோருக்கும் 30 வயதுக்குள் தான் இருந்தது. இதுகுறித்து தனது அனுபவத்தை பகிரும் கஸாலி, “என்னுடன் படித்த மாணவ, மாணவிகளை திரும்பிப் பார்த்தால் எல்லோரும் என் பிள்ளைகள் வயதில் இருந்தார்கள். ஆனால், நான் அதற்காக கூச்சப்படவில்லை” என்றார்.
அந்த படிப்பை முடித்தாலும், வயதைக் காரணம் காட்டி நிறுவனங்கள் தன்னை வேலைக்குச் சேர்க்க மாட்டார்கள் என்றும் கஸாலி கவலைப்பட்டார். ஆனால் அவர் விடாமுயற்சியுடன் வார இறுதி நாட்களிலும் வகுப்புக்குப் பிறகும் கூடுதல் நேரத்தை ஒதுக்கி பயின்றார். அதன் பலன், அவரது ரிஸல்ட்களில் தெரிந்தது. இதனால், அவர் விரும்பிய வேலை அவருக்கு கிடைத்தது.
இன்று, திரு கஸாலி, ஒரு மல்டிநேஷ்னல் கம்பெனியில் ஒரு முழு-ஸ்டாக் டெவலப்பர் பணியில் உள்ளார். அவர் டிரைவராக இருந்த போது சம்பாதித்ததை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். Databases, servers, சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் மற்றும் clients என்று சகல வேலைகளையும் திறம்பட கையாளும் ஒரு full-stack developer-ஆக பணிபுரிந்து அசத்தி வருகிறார்.
வெறும் ஒன்பதே மாதத்தில் தன் வாழ்க்கை பயணத்தையே கஸாலி மாற்றிவிட்டார். நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது என்பதை நம்மை போன்ற பலருக்கும் அவர் நிரூபித்து இருக்கிறார்.
எல்லாவற்றையும் விட முக்கியம்.. சிறு வயதிலேயே அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். இதனால், படிப்பின் மீது ஆர்வம் இருந்தும் குடும்ப சூழல் காரணமாக அவரால் படிக்க முடியவில்லை. இன்று பெற்றோர்கள் துணையின்றி அவர் தனது பாதையை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.