TamilSaaga

“இதுவரை சிங்கப்பூரில் 84 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” : சுகாதார அமைச்சகம் தகவல்

சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 30) ​​நண்பகல் நிலவரப்படி 3,112 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 14 பேர் வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்துள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. 63 மற்றும் 98 வயதிற்குட்பட்ட அவர்கள், பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களிடம் கண்டறியப்பட்ட மருத்துவ நிலைமைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிடவில்லை. இதன் மூலம் சிங்கப்பூரில் பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை பதிவான வழக்குகளில், 3,108 நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் பரவியுள்ளது, இதில் சமூகத்தில் 2,608 மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் 500 வழக்குகள் உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த நான்கு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்றும், MOH அதன் தினசரி ஊடக வெளியீட்டில் நேற்று இரவு 11.30 மணியளவில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரை பொறுத்தவரை அக்டோபர் 28 நிலவரப்படி, 84% பேர் முழுமையாக அல்லது இரண்டு டோஸ் பெருந்தொற்று தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 85% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் மற்றும் 14% பேர் கூடுதலாக பூஸ்டர் ஷாட்களையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டில் தடுப்பூசி போடுவதை மேலும் ஊக்குவிக்க, 60 வயது மற்றும் அதற்கு மேல் தடுப்பூசி போடாத முதியவர்களுக்கு சிங்கப்பூர் டாலர் 30க்கான மின்-வவுச்சரை சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் “60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பாக தடுப்பூசி போடாதவர்கள், தொடர்ந்து பெருந்தொற்றல் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்” என்று அமைச்சகம் கூறியது. ஹெல்த்ஹப் இணையதளத்தின்படி, சிங்கப்பூரில் “மூத்தவர்களுக்கு தடுப்பூசி” திட்டம் கடந்த ஆகஸ்ட் 13 அன்று தொடங்கப்பட்டது மற்றும் நவம்பர் 30 வரை இந்த இயக்கம் இயங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts