TamilSaaga

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களை கலங்க வைத்த ‘மல்லிப்பூ’ பாடல் – மனைவி, பிள்ளையை பார்க்க முடியாமல் தவிக்கும் ஒரு கணவனின் வேதனை!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து கடந்த செப்.15ம் தேதி வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் ரொம்ப ஸ்லோவாக உள்ளது என்ற பொது விமர்சனம் இருந்தாலும், படத்தில் சில காட்சியமைப்புகள் ரசிக்க வைத்துள்ளன. அவற்றில் குறிப்பாக, ‘மல்லிப்பூ’ பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தாமரை வரிகளில் உருவான அந்த பாடல் இசைக்காக மட்டும் கொண்டாடப்படவில்லை. குடும்பத்தை பிரிந்து கடல் கடந்து வேலைப் பார்க்கும் ஊழியர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். படத்தில், அப்படியொரு காட்சியமைப்பில் தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மனைவி, குழந்தைகளை பார்க்க முடியாமல் ஒரு தந்தை படும் வேதனையை ஒரு துள்ளலான பாடலாக ரஹ்மான் உருவாக்கி இருப்பார். தாமரையின் வரிகள், வெளிநாட்டு ஊழியர்களின் மனதை அப்படியே பிரதிபலித்திருக்கும்.

இந்நிலையில் மல்லிப்பூ பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெறும் ‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே’ பாடல் பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி. இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது. இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் நிரம்பி வழியும் வெள்ளம்.. பாதைகளை இழுத்து மூடிய அதிகாரிகள் – கவனம் நண்பர்களே!

பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு ! கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், இரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது.

படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் ‘பிரிவு’ ஒரு வலுவான உணர்வல்லவா ?? இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம். முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல். விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts