TamilSaaga

“நேர்த்தியாக திட்டம் வகுத்து உதவிய பூமிகா டிரஸ்ட்” – மணிரத்தினத்திற்கு நன்றி சொன்ன நடிகர் நாசர்.

இந்த பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் பல தொழில்கள் முடங்கி வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அன்றாட பிழைப்பை நம்பி மட்டுமே வாழும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சினிமாத்துறையில் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் 400க்கும் மேற்பட்ட மூத்த நாடக-சினிமா கலைஞர்களுக்கு 5 மாதத்திற்கான பொருளுதவியை அளித்த பூமிகா தொண்டுநிறுவனத்திற்கு நடிகர் நாசர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் இந்த காரியத்திற்கு காரணகர்த்தாக்களாகிய இயக்குநர் மணிரத்தினம் அவர்களுக்கும் தனது நன்றியை நாசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் நாசர் வெளியிட்ட பதிவில் “நடிகர் சங்கம் சார்பாக பூமிகா அறக்கட்டளைக்கு நன்றி. உலகமே இருளில் தத்தளிக்கிறது, சோடியம் விளக்கு, எல்இடி விளக்குகளை தேடாமல் சின்னஞ்சிறு தீக்குச்சி உரசலுக்காக உலாவிக் கொண்டிருக்கும்போது அகல் விளக்காய் வந்த பூமிகா அறக்கட்டளை. வெளிச்சம் எவ்வளவு தூரம் பாய்கிறது என்பதை விட, வெளிச்சம் தோன்றியது என்பது தான் மகத்துவம்.”

“மிக மிக நேர்த்தியாக திட்டம் வகுத்து, அதை நடைமுறைப்படுத்திய பூமிகா டிரஸ்ட் முன் உதாரணமாக இருக்கிறது. அதன் காரண கர்த்தாக்களாகிய இயக்குனர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் ஜெயேந்திரன் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்வது என் கடமையாகிறது”. “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 400க்கும் மேற்பட்ட மூத்த நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு உதவி கரம் நீட்டி, ஐந்து மாதங்களுக்கான பொருள் உதவி செய்திருப்பது பல குடும்பங்களில் இருள் போக்கும் விலக்காகிறது”

“கலைஞர்கள் அனைவரும் நேரில் சென்று வாங்கிச் சென்றார்கள். பூமிகா ட்ரஸ்டுக்கு உதட்டளவில் இல்லாமல் ஆழ்மனதிலிருந்து உதவி பெற்ற கலைஞர்களின் சார்பாக, நடிகர் சங்கம் சார்பாக நன்றிகளை அர்ப்பணிக்கிறோம். அவர்கள் நோக்கமும் இலக்கும் வெற்றி பெறட்டும். நன்றியுடன் நாசர்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

Related posts