சிங்கப்பூரில் இந்த 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள், முக்கியமாக கட்டுமானத் துறையில் பணி அனுமதி வைத்திருப்பவர்களுக்கு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
முதல் காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி குடியுரிமை பெறாத தொழிலாளர்களை பணியமர்த்தியது மூலம் தான் என்பதை அமைச்சகமும் தெளிவுபடுத்தியுள்ளது.
இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 28) வெளியிடப்பட்ட MOMன் ஆரம்ப தொழிலாளர் சந்தை அறிக்கையின்படி, முதல் காலாண்டில், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களைத் தவிர்த்து 41,100 தொழிலாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டை விட சற்றே குறைவாக இருந்த போதிலும், மொத்த வேலைவாய்ப்பு 47,900ஆக வளர்ந்துள்ளது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த மாதம் பிப்ரவரியில் 2.1ஆக இருந்த நிலையில் தற்போது 2.2 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று நோய் காலத்தில் பெரிய அளவிலான ஆட்குறைப்பு சிங்கப்பூரில் இருந்தபோது பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைவதால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு மீண்டும் அதிகரித்து வருகின்றது.
மனிதவள நெருக்கடியை எதிர்கொண்டு நிலையில், தற்போது சிங்கப்பூர் கோவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறுவதால், இங்குள்ள முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை முடுக்கிவிட்டுள்ளனர் என்றே கூறலாம்.