உலகம் முழுவதும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்களை மிக மோசமாக கொரோனா பெருந்தொற்று படுத்தி எடுத்தது. குறிப்பாக, இரண்டாவது அலையில் பல உயிர்களை இந்தியா பறிகொடுத்தது.
நமது சிங்கப்பூரை பொறுத்தவரை, இந்தியா அளவுக்கு சேதம் இல்லையென்றாலும், நம்மையும் போட்டுத் தாக்கிவிட்டது. பொதுமக்களின் தினசரி வாழ்க்கையை முடக்கியது. குறிப்பாக, இந்த காலக்கட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பட்டபாடுக்கு அளவே இல்லை.
தங்கள் dormitory-யிலேயே முடங்கிக் கிடக்கும் அவலம் உருவானது. வெளியில் தலை வைத்து கூட படுக்க முடியாது. ஒரே அறையில் பல பேர் அடைந்து கிடைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த அறையில் ஒருவருக்கு கொரோனா வந்தால், ஒட்டுமொத்த பேருடைய நிலைமையும் காலி.
இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழலில் இருந்து, கடந்த பிப்ரவரி மாதத்துக்கு மேல் தான் சிங்கப்பூர் மூச்சு விட ஆரம்பித்தது. வெளிநாட்டு ஊழியர்களும் மூச்சு விட ஆரம்பித்தார்கள். 2 வருடங்களாக சொந்த ஊருக்கே போகாமல் இருந்தவர்கள், இப்போது தான் மெல்ல மெல்ல விடுமுறை பெற்று ஊருக்கு போய் வருகிறார்கள்.
அதேசமயம், தமிழக ஊழியர்கள் சிலர் இந்த கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு தங்கள் உடல்நலனில் பெருமளவு அக்கறை காட்டுகின்றனர். உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாக வைப்பதிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு, பலருக்கும் உடலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில், ‘THE STRAITS TIMES’ ஊடகம் அண்மையில், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் தமிழக ஊழியர்களை பேட்டி கண்டுள்ளது.
சிங்கப்பூரின் Westlite Juniper dormitory-யில் தங்கி பணிபுரியும் சாமிநாதன் ராமலிங்கம் மற்றும் சுந்தரேசன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அந்த பேட்டியில் இடம் பெற்றுள்ளனர். பார்க்கவே கம்பீரமாக தோற்றமளிக்கும் இருவரும், தங்கள் உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாகவும், கட்டுமஸ்தாகவும் வைத்துள்ளனர்.
வேலைக்கு போனோம், குடும்பத்தாரிடம் ஃபோனில் வீடியோ கால் பேசினோம், சமூக வலைத்தளம் பார்த்தோம், தூங்கினோம் என்று இல்லாமல், இவர்கள் போன்று உடல் நலத்திலும் அக்கறை செலுத்தினால் நல்லது.