TamilSaaga

“சிங்கப்பூர் கெய்லாங் செராய் சந்தை மூடல்” : தடைபடும் தீபாவளி வியாபாரம் – சோகத்தில் வியாபாரிகள்

சிங்கப்பூர் கெய்லாங் செராய் மார்க்கெட் இன்று திங்கள் (நவம்பர் 1) முதல் புதன்கிழமை வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் அங்கு பெருந்தொற்று வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றுச்சூழல் நிறுவனமான NEA சந்தை வளாகத்தை ஆழமாக சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் வசதியாக இந்த இடம் மூடப்படும் என்று கூறியுள்ளது.

NEA நேற்று மாலை ஞாயிற்றுக்கிழமை மாலை (அக்டோபர் 31) அன்று வெளியிட்ட அறிக்கையில், கடைக்காரர்கள் மற்றும் சந்தையில் உள்ள மற்ற தொழிலாளர்களிடையே பெருந்தொற்று வழக்குகள் பற்றி அறிந்திருப்பதாகவும், பசார் கெயிலாங் செராய் வணிகர்கள் சங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு மூடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை பிற்பகலில் சமூக ஊடகங்களில் மூடல் பற்றிய வதந்திகள் பரவத் தொடங்கியதால் கடைக்காரர்கள் கவலையடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் நவம்பர் 4ம் தேதி வரும் இந்து பண்டிகையான தீபாவளிக்கு முன்னதாக கடைக்காரர்கள் பலர் வியாபாரத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். இந்த காலகட்டத்தில், அவர்கள் வழக்கமாக இந்து சமூகத்திலிருந்து நிறைய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள் என்று கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை சந்தைக்குள் நுழைய நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர் ஆனால் பல கடைகள் மூடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று நாள் மூடல் தேவையான ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில் பண்டிகை நேரத்தில் கடைகள் மூடப்பட்டது வியாபாரிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts