மலேசியாவில் 36 வயது மதிக்கத்தக்க முரளி என்ற நபர், சாலையில் சென்றுகொண்டிருந்தபோது முகமூடி அணிந்த நான்கு நபர்களால் 8 முறை தலை மற்றும் உடலில் சுடப்பட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 25 அன்று மதியம் 12 மணியளவில் கெடாவில் உள்ள சுங்கை பெட்டானியில் நடந்த இந்த சம்பவம் மலேசிய சீன ஊடகமான ஓரியண்டல் டெய்லி மற்றும் சின் செவ் டெய்லி மற்றும் ஆங்கில ஊடகமான ஃப்ரீ மலேசியா டுடே மற்றும் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர துப்பாக்கிச் சூடு நடந்தபோது இறந்த முரளியின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முரளி தலையிலும் உடலிலும் பலமுறை சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நடுரோட்டில் கணவன் சுடப்பட்டதை கண்ட அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார், அருகில் இருந்த குழந்தை முரளியின் வளர்ப்பு பிள்ளை என்று கூறப்படுகிறது. தனது குழந்தை, மனைவி மற்றும் சில நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் அவர் உணவு உண்டுள்ளார்.
பிறகு நிறைய பார்சல் வாங்கிக்கொண்டு தனது காரில் அவர் ஏற முயன்றபோது 4 பேர் கொண்ட கும்பல் முழுமையாக தலைக்கவசம் அணிந்து மோட்டார் பைக்கில் அங்கு வந்துள்ளனர். சுமார் 1 மீட்டர் தொலைவில் நின்ற அந்த 4 பேர், முரளியின் தலை மற்றும் உடலை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.
அதிக ரத்தப்போக்கால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார், கொல்லப்பட்ட அவர் தேடப்படும் குற்றவாளியா? மோசடி கும்பலை சேர்ந்தவரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் அவரை கொன்றவர்கள் யார் என்பதையும், அருகில் உள்ள CCTV காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.