துபாயில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை இந்து முறைப்படி அங்குள்ள இஸ்லாமியர்கள் இறுதிச் சடங்கு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள், பல்வேறு மத குழுக்களிடையே மோதல்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேட்க நேரிடுகிறது. தற்போது ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவி வருவது அனைவரும் தெரிந்த ஒன்று.
மத குழுக்கள் இடையேயான சலசலப்புகள் சமீப காலமாக சற்று அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தற்போது ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் புர்கா அணிந்து வருவதற்கு போட்டியாக, ஹிந்து மாணவ மாணவிகள் காவித்துண்டு அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசு, மதம் அடையாளம் தாண்டி, அனைவரும் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது இப்போது அங்கு புயலாக உருவெடுத்துள்ளது.
இப்படியொரு சூழலில் தான் துபாயில் நடந்த இந்த சம்பவம், மத நல்லிணக்கத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேந்தவர் அருணா தங்கப்பா (58). இவர் கடந்த டிசம்பர் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2022/02/OOzhiyar.jpg)
அவர் தான் வேலை செய்த இடத்தில் இருந்து வெளியேறி வசித்து வந்தார். இதனால் அவருக்கு தெரிந்தவர்கள் இந்திய துணை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி வேலூரில் வசித்து வரும் அவரது சகோதரர் அன்பு என்பவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது சகோதரர் ஏற்கனவே விவகாரத்து பெற்றவர் என்பதால் துபாயிலேயே அவரது உடலை தகனம் செய்ய வேண்டும் என்று சகோதரர் அன்பு கேட்டுக் கொண்டார்.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2022/02/thaganam.jpg)
பிறகு இதற்கான ஆவணங்கள் கிராம நல அலுவலரிடம் இருந்து பெற்று, துபாயில் உரிய அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய துணை தூதரத்தின் ஒத்துழைப்புடன், கடந்த 6-ம் தேதி இந்து முறைப்படி அருணா தங்கப்பா உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, ஜெபல் அலி மயானத்தில் மின்சாரம் மூலம் தகனம் செய்யப்பட்டது.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2022/02/body.jpg)
இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் முதுவை ஹிதாயத், லெப்பைக்குடிக்காடு சையது சலீம் பாஷா, திருவாரூர் நிஜாம், சென்னை வெங்கட், மதுரை பாலாஜி, சென்னை பாலாஜி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
![](https://tamilsaaga.com/wp-content/uploads/2022/02/dubai-1.jpg)
தனது சகோதரரின் உடலை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சகோதரர் அன்பு நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அருணா தங்கப்பா உடலின் அஸ்தி துபாயில் உள்ள கடல் பகுதியில் கரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.