வங்காளத்தில் விபின் சந்திரபாலும், பஞ்சாபில் லாலாலஜபதி ராயும், மராட்டியத்தில் பாலகங்காதர திலகரும் விடுதலைப் போராட்டத் தளபதிகளாக விளங்கிய போது, தமிழ்நாட்டில் விடுதலை போராட்ட தளபதியாக விளங்கியது சிதம்பரனார் தான்.
எழுத்தாளர், வழக்கறிஞர், பேச்சாளர், தொழிற் சங்கத்தலைவர், சுதந்திர போராட்ட வீரர் என பல தளங்களில் இயங்கி, இந்நாட்டிற்காக உழைத்து தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
அப்படிப்பட்ட வ.உ.சி அவர்களின் சிலை நமது சிங்கப்பூரில், 1950ம் ஆண்டு அன்றைய இந்தியாவின் பிரதமர் நேரு அவர்களால் திறக்கப்பட்டது. அய்யா பி.ஜி.பி அவர்களால் இந்த நினைவிடம் கட்டப்பட்டது என்பதை அறிவோம். இந்நிலையில் இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்ற செக்கிழுத்த செம்மல் அய்யா வ.வு.சிதம்பரம் அவர்களின் சிலையை அங்கு மீண்டும் நிறுவிட கடந்த சில மாதங்களுக்கு முன் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்மறையான் என்பவர் முகநூல் பதிவில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “நமது மகாத்மா காந்தி நினைவு மண்டபம் அறங்காவலர்கள் குழுவினர்க்கு, எனது பணிவான வணக்கம்”. “மண்டபத்தின் உள்ளே மாடிப்படி ஓரமாக கீழ்தளத்தில், மேடை அமைத்து வ.உ.சி சிலையை நமது முன்னோர்கள் நிறுவினர், பலரும் அறிவர்.”
“அண்ணல் காந்தி, வ.உ.சி இருவரின் பிறந்த நாள், நினைவு நாட்களில் மாலை சூட்டி வணக்கம் செலுத்துவதுண்டு. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, புதுப்பிப்பு பணி காலத்தில் குத்தகையாளர் உடைத்து எறிந்து விட்டதாக அறங்காவலர்களுள் ஒருவராகிய வழக்கறிஞர் மதிப்பிற்குரிய ஐயா. திரு.சீனிவாஸ் ராய் என்னிடம் கூறினார். நான் மிகவும் கண்கலங்கி வருத்தமுற்றேன்.”
“வருகிற செப்டம்பர் மாதம் வ.உ.சி நினைவு நாளுக்கு முன் அவரது சிலையை அதே இடத்தில் நிறுவிட, பணிவன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன் நன்றி”
என்று அந்த பதிவில் அவர் கூறியிருந்தார். எனினும், இன்னும் அங்கு வ.உ.சி அவர்களின் சிலை அங்கு அமைக்கப்பட்டதா என்ற தகவல் தெரியவில்லை. அப்படி விவரம் தெரிந்தவர்கள் இருப்பின், Comments-ல் உங்கள் தகவல்களை பதிவிடலாம்.