முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் வரலாம் என்று பிரதமர் லீ கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு, வெளிநாட்டு பயணிகள் மற்றும் சிங்கப்பூருக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது. இதனால், வரும் ஏப்ரல் 1 முதல் பெருமளவில் பயணிகளின் புழக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், Work Permit உள்ள ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அவர்களுக்கு Entry Approval கட்டாயம் தான்.
இந்நிலையில், பயணிகளின் புழக்கம் அதிகரிக்கும் என்பதால், சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இனி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பொதுப் பேருந்துகளையோ, MRT ரயில்களையோ பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விமான நிலையத்தில் இருந்து நேரடியாக டாக்சிகளிலோ, தனியார் வாடகை காரிலோ அல்லது சொந்த வாகனத்திலோ பயணிகள் வெளியேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வரும் ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தொற்றுக்கு முன்பிருந்த சூழலை உருவாக்க வேண்டும் என்ற சிங்கப்பூர் அரசின் முயற்சியின் விளைவாக, இந்த தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அதை பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் அணுக வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.