TamilSaaga

உங்க அக்கவுண்டில் உள்ள பணத்தை அபேஷ் செய்ய ஜனவரி முதல் கொள்ளையர்கள் பயன்படுத்தும் புதுயுத்தி…. அலர்ட் செய்த போலீசார்!

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 2023 முதல், வங்கிகள் அல்லது வங்கி ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி(SMS) அனுப்புவதன் வாயிலாக பணமோசடி செய்யும் வழக்குகள் அதிகரித்துள்ளன. புத்தாண்டு (2024) பிறந்து முதல் இரண்டு வாரங்களில் மட்டும் noகுறைந்தது 219 DBS வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு, சுமார் $446,000 மொத்த பண இழப்பைச் சந்தித்துள்ளனர் என்று சிங்கப்பூர் காவல் துறையும் (SPF), பாதிக்கப்பட்ட வங்கியுமான DBS ம் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜனவரி 14) தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்த மோசடியின் பெரும்பாலான சமயங்களில் மோசடிக்காரர்கள், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு , வெளிநாட்டு எண்கள் அல்லது உள்ளூர் எண்களைக் கொண்ட கோரப்படாத குறுந்தகவல்களை (SMS) முதலில் அனுப்புகிறார்கள். அதில் தாங்கள் DBS, POSB வங்கிகளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கை அணுகுவதற்கு அங்கீகரிக்கப்படாத முயற்சிகள் நடைபெறுவதாகவும், அதனை தடுத்து நிறுத்திட உடனே அவர்கள் அனுப்பிய குறுந்தகவலில் இருக்கும் இணைப்பை ( link )சொடுக்குமாறும் எச்சரிக்கிறார்கள்.

இதனை நம்பி , யோசியாமல் அந்த இணைப்பை சொடுக்கும் வாடிக்கையாளர்களை, அந்த இணைப்பானது போலியான DBS வங்கி இணையதளத்திற்குக் கொண்டு செல்கிறது.
அது போலியான இணையதளம் என்று அறியாத வாடிக்கையாளர்களை, அதில் கேட்கப்படும் அவர்களது ரகசிய வங்கி விவரங்கள், OTP போன்றவற்றை பதியுமாறு வேண்டப்படுகிறார்கள்.
இந்த மோசடியை அறியாமல், வாடிக்கையாளர்கள் தங்கள் ரகசிய வங்கி விவரங்களை அளித்தவுடன், மோசடிக்காரர்கள் அதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.


சில சம்பவங்களில் DBS வங்கியின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போல் நடித்து WhatsApp வழி தகவல் அனுப்பி மக்களை ஏமாற்றும் உத்தியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் கண்டறிந்தால் மட்டுமேதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்வார்கள்.
பொதுமக்கள் இத்தகைய பண மோசடிகளில் சிக்காமல் இருக்க காவல்துறை, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது.

  • வாடிக்கையாளர்கள் ScamShield எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.இதன் மூலம் தேவையற்ற மோசடி அழைப்புகள் மற்றும் மோசடி குறுந்தகவல்களைத் தவிர்க்க இயலும்.
  • மேலும் DBS வங்கி, வாடிக்கையாளர்களுக்கு SMS வழியாக கிளிக் செய்யக்கூடிய இணைப்புகளை அனுப்பாது என்றும் மேலும் பொதுமக்கள் OTPகள் உட்பட தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
  • முக்கியமாக மோசடிகள் குறித்து குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேவைப்படின் புகார் அளிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இது போன்ற குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் அல்லது பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால், 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையின் அவசர எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தை அணுகலாம்.அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவசர காவல்துறை உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து ‘999’ ஐ டயல் செய்யுவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

  • மோசடிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொதுமக்கள் www.scamalert.sg ஐப் பார்வையிடலாம் அல்லது 1800-722-6688 என்ற எண்ணில் ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைனையும் அழைக்கலாம்.
    இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராடுவது ஒரு சமூக முயற்சி. அனைவரும் ஒன்றாக, நமது சமூகத்தைப் பாதுகாக்க, விழிப்புணர்வுடன் செயல்பட்டு மோசடிகளுக்கு எதிராகச் செயல்பட்டால் நிச்சயம் நமது பணத்தைக் காத்திடலாம்.
  • எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற குறளுக்கு ஏற்றவாறு, எந்த தகவல் எந்த முறையில் வந்தாலும், அதை நாம் அப்படியே ஏற்காமல் விழிப்புடன் யோசித்து செயல்பட்டால் இத்தகைய மோசடிகளிலிருந்து எளிதாக தப்பி விடலாம்.

Related posts