நமது காலில் 6 கிலோ எடையுள்ள பந்து விழுந்தாலே தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கையில் அது முகத்தில் விழுந்தால்…?
சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றின் போது, மலேசிய நடிகை ஒருவருக்கு அந்த வேதனையான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
Ratu Ten Pin என்ற நாடகத் தொடரில், மாற்றுத்திறனாளி பந்து வீச்சாளராக நடிக்கும் நடிகை ஷீலா ரஸ்லி, சம்பவத்தின் போது மேக்கப் எல்லாம் போட்டு, ஷாட்டுக்கு ரெடியாக இருந்தார். பாத்திரமாகவே மாறி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
50 வயதான ரஸ்லி சக்கர நாற்காலியில் 6 கிலோ எடையுள்ள பந்து வீசும் பந்தையும் மடியில் வைத்திருந்தார். ஆக்ஷன் சொன்னவுடன், சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு, பந்தை அவர் வீச முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக, நாற்காலியின் முன்பக்கம் மேலே எழும்ப, இவர் கையில் வைத்திருந்த பந்துடன் அப்படியே தலைக்குப்புற விழுந்தார்.
சாய்ந்த வேகத்தில், அந்த 6 கிலோ எடையுள்ள பந்து, நல்ல வேகத்தில் அவர் முகத்திலேயே விழுந்தது.
இந்த சம்பவத்தை அப்படியே வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் நடிகையின் கணவர் Azman Yahya வெளியிட்டுள்ளார். இவர் மலேசியாவில் தொலைக்காட்சி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
அஸ்மான் அந்த பதிவில், “உன் முகத்தில் 13 பவுண்ட் பந்து விழுந்ததைப் பார்த்தபோது நான் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளானேன் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
“உன் வாயில் ரத்தம் நிரம்பி இருந்தது, ஆனால் உன்னால் அதை தாங்க முடியும் என்று எனக்குத் தெரியும். அந்த வலியை உன்னால் சமாளிக்க முடியும் என்று எனக்குத் தெரியும்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
மலேசிய ஊடகங்களில் தகவலின் படி, நடிகை ஷீலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், அதன் பிறகு அவர் தற்போது மீண்டும் ஷூட்டிங் கிளம்ப ரெடியாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.