SINGAPORE: ‘அடேங்கப்பா’ மோடில் சிங்கப்பூரில் காதல் மோசடி சம்பவம் அரங்கேறியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஒரு பெண் மீது இன்று (மார்ச்.1) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கியிருக்கும் அந்த பெண்ணின் பெயர் நூருல் அய்ன் அப்துல் ஷுக்கூர் (Noorul Ayn Abdul Shukoor). அவரிடம் இருந்து இன்டர்நெட் காதல் மோசடியில் சிக்கி ஏமாந்தவர்கள் S$290,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவ்வளவு பணம் எப்படி அவருக்கு கிடைத்தது என்பதற்கான சரியான ஆவணங்களை கொடுக்க தவறியதால் சந்தேகத்தில் அடிப்படையில் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது என்ன இன்டர்நெட் காதல் மோசடி?
டிசம்பர் 2020 இல், சிங்கப்பூரில் 48 வயது பெண்ணிடமிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் ஒன்று வந்தது. கூப்பிட்டு அவரை விசாரித்ததில், பாதிக்கப்பட்ட பெண் “நீண்ட நாட்களாக ஆன்லைனில் ஒரு ஆண் நண்பருடன நட்பு கொண்டிருந்தேன். இருவரும் நெருங்கிப் பழகினோம். மணிக்கணக்கில் பேசுவோம். இந்நிலையில், அவர் ஒருநாள் என்னிடம், “உனக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் பார்சலை ஒன்றை அனுப்பியுள்ளேன்” என்று கூறினார். நானும் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், கஸ்டம்ஸ் அதிகாரிகள் பேசுகிறோம் என்று கூறிய சிலர், அந்த பார்சலை ரிலீஸ் செய்ய பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். இதையடுத்து, ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட் நம்பருக்கு S$16,000 தொகையை மாற்றினேன்.
சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் பணம் செலுத்துமாறு கேட்டபோது தான், நான் ஏமாற்றப்படுகிறேன் என்பதை உணர்ந்து போலீஸில் புகாரளிக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் இந்த வழக்கில் தீவிரம் காட்ட, இதேபோன்றதொரு இன்டர்நெட் காதல் மோசடியில் 58 வயதான பெண்மணியும் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரும் அதே அக்கவுண்ட் நம்பருக்கு S$274,000 பணம் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை தீவிரமடைய அந்த அக்கவுண்ட் நூருல் அய்ன் அப்துல் ஷுக்கூர் என்ற பெண்ணுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அவர் ‘Shaahi’ உணவகத்தின் இயக்குநர் என்பதும் கண்டறியப்பட்டது. அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. சிங்கப்பூர் சட்ட திட்டத்தின்படி இதுவே ஒரு குற்றமாகும்.
அதாவது, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் accounts பதிவுகளை பராமரிக்கத் தவறினால் குற்றவாளிகள் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதையடுத்து, நூருல் அய்ன்மீது சிங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த மோசடி சம்பவத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவது தெரிந்தால், பொதுமக்கள் ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைனை (1800-722-6688) தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.