TamilSaaga

சொந்த குடும்பமே தான் நேசித்த பெண்ணை தவறாய் பேச.. நம்பிக்கை வைத்து தாலி கட்டிய இளைஞர் – சிங்கப்பூரில் வேலைக் கிடைத்து இன்று ஊர் தரும் “Respect” வேற லெவல்!

வெளிநாடு வாழ்க்கை என்பது எப்படியெல்லாம் ஒரு மனிதனுக்கு சோதனையாக அமையும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.. நமது தமிழ் சாகா Exclusive குழுவுக்கு சிங்கப்பூரில் வேலைப்பார்த்து இன்று புரட்சிகர இளைஞராய் உருவெடுத்து நிற்கும் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர்கள் அளித்த பேட்டி இது. இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக…

“வணக்கம் சார்.. என்னோட வாழ்க்கை பல பேருக்கு Inspiration-ஆ இருக்கணும் நினைச்சு இத சொல்லல.. ஆனா, என் மனசுக்குள்ள எரிஞ்சிக்கிட்டு இருக்குற நெருப்புக்கு ஒரு சிறிய ஆறுதலா இருக்கும்-னு சொல்றேன். என்னோட ஊர் கும்பகோணம் பக்கத்துல இருக்குற ஒரு கிராமம். கும்பகோணத்துக்கு, பாபநாசத்துக்கும் இடையில இருக்கு. 7 வருசத்துக்கு முன்னாடி சிங்கப்பூர் போய் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைச்சது, இப்போ மட்டும் இல்ல 7 வருஷத்துக்கு முன்னவும் சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது கஷ்டம் தான்.

நாங்க பெரிய ராயல் Family எல்லாம் இல்ல, நடுத்தர குடும்பம் தான், பாலிடெக்னிக் முடிச்சேன் உள்ளூரில் வேலைபார்த்த ஒரு வருட Experience வச்சு சிங்கப்பூரில் வேலை தேடினேன். உண்மையில் கொஞ்சம் சீக்கிரம் செட்டில் ஆகணும்னு தான் வெளிநாட்டு வேலை தேடினேன் அதுக்கு முழு காரணம் என்னோட சிந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் சார், என்னோட மனைவி. சொந்தக்கார பெண் இல்ல, எங்க வீட்டுக்கு எதிர் வீட்டு பொண்ணு அவ்ளோதான்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Changi விமானநிலையத்தில் வேலை : ADP License உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் – தினமும் 8 மணி நேர வேலை.. 2910 வெள்ளி சம்பளம்

Love at First Sightனு சொல்வாங்க பாருங்க அதே மாறித்தான் சார் எங்க காதலும், ஆனா ரொம்ப நேர்மையான அதீத புரிதல் உள்ள ஒரு காதல் சார். 2 வருஷம் அப்படி லவ் பண்ணோம், ஆனா என் விரல் நுனி கூட அவ மேல பட்டது இல்ல. பெருமைக்காக சொல்லல சார், இந்த தோப்பு, சினிமா தியேட்டர் அப்படி இப்படினு நாங்க எங்கயும் வெளியே போனதில்ல. கண்களை தாண்டி ஒரு படி கூட எங்கள் காதல் எல்லை மீறியதில்லை, ஒரு காலகட்டத்துல ரெண்டு வீட்டாருக்கும் எங்கள் காதல் பற்றி தெரியவந்துச்சு, சரி பையன் நல்லா சம்பாரிக்கணும் அப்படினு எங்க வீட்டுலயும் மாப்பிள்ளை நல்லா சம்பாரிக்கட்டும் அப்படினு சிந்து வீட்லயும் சொல்ல, நானும் ஆசை ஆசையாய் வெளிநாடு கிளம்பினேன் சார்.

அது தான் என் முதல் விமான பயணம், சரியா 2014 நவம்பர் மாசம் சிங்கப்பூர் வந்து இறங்குனேன் என் நிறுவனத்துக்கு உண்மையா உழைச்சேன் சார். பெருமைக்காக சொல்லல நான் நல்ல உழைப்பாளி, என் கம்பெனிகாரங்க என்ன அப்படி பாத்துக்கிட்டாங்க. ரெண்டு வருஷத்துல நல்ல வளர்ச்சி மாசம் 30000 வரை வீட்டுக்கு அனுப்புவேன். காதல் ஒருபக்கம், வேலை ஒருபக்கம், வீடு ஒரு பக்கமுன்னு வாழ்க்கை சூப்பரா போச்சு. காலம் நகர்ந்துச்சு ஒரு கட்டத்துல எனக்கு தோணுச்சு, சரி கல்யாணம் பண்ணிக்க இதுதான் நல்ல நேரம்னு. அதனால சிந்து வீட்டுல எங்க அம்மா அப்பாவ போய் பேச சொன்னேன்.

அவங்களும் பேசுறேன்னு சொன்னாங்க, ஆனா நான் பேசி ஒருவாரம் ஆனதுக்கு அப்புறமும் என் அம்மா அப்பாகிட்ட இருந்து எந்தவித பதிலும் இல்ல. அங்க தான் சார் ஆரமிச்சது பிரச்னை, ஒரு நாள் நானே பொறுமை தாங்காம வீட்டுக்கு போன் பண்ணேன். எங்க அம்மா ஒரே அழுகை, அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம் தினேசுனு. அவ நல்லவளே இல்ல, கண்ட பயகூட ஊற சுத்துறா, நேத்து கூட அப்பா கூட வெளில போறப்ப பார்த்தேன் எவன்கூடவோ வண்டில போற அப்படினு சொன்னாங்க.

மேலும் படிக்க – Exclusive : 7 மணிநேரம் தாமதமான திருச்சி சிங்கப்பூர் Scoot சேவை – விடியவிடிய திருச்சி விமான நிலையத்திலேயே காத்திருந்த பயணிகள்

அடுத்து எங்க அப்பா, நம்ம வேற இடம் பாக்கலாம் அப்படினு சொல்ல என் சொந்தகாரங்க 2 பேரு ஒரு நாள் போன் போட்டு புலம்பி தீத்தாங்க. என்ன பண்றதுனு தெரில சார், ஒரு வாரம் யார்கிட்டவும் பேசல. ஒரு வாரம் கழிச்சு ஒரே ஒரு போன் அடிச்சேன். நாளைக்கு ஊருக்கு வரேன் திருச்சிக்கு டிக்கெட் போட்டுருக்கேன் அப்படினு சொல்லிட்டு வச்சுட்டேன். ஊருக்கு போன உடனேயே சொந்தங்காரன் எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்க. போன்ல பேசினது நேர்ல சொன்னாங்க, ஒரு கட்டத்துல எனக்கே சிந்து மேல ஒரு சந்தேகம் வர அளவுக்கு பேசினாங்க.

உடனே மனசு கேக்கல அவல பாக்க போனேன், நீ என்ன எப்படி விட்டு போனியோ அதேமாறி சுத்தமா தான் தினேஷ் இருக்கேன். ஆனா இனி எல்லாம் உன் விருப்பம், உனக்கு என் மேல இருந்த நம்பிக்கை ஒரு சதவிகிதம் குறைஞ்சுருந்தாளும் நீ தயவு செஞ்சு உங்க வீட்ல சொல்ற பொண்ண கட்டிக்கோ, நானும் படிச்சுருக்கேன் என் வாழ்க்கைய நான் பாத்துப்பேன்னு சொன்னா. செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு சார், ஏன்னா லவ் பண்ண புதுசுல சில சமயம் அவ கைய புடிச்சுக்கணும்னு ஆசைப்படுவேன், கோவக்காரி அதுக்குகூட ஒத்துக்கமாட்டா, அவ்ளோ நல்ல பொண்ண ஒரு நிமிஷம் சந்தேகப்பட்டோமே கலங்கினேன்.

நீங்க நம்புனா நம்புங்க, அவ கைய புடிச்சேன் சார் தர தரனு இழுத்துட்டு போனேன் எங்க ஊரு மாரியம்மன் கோவில் வாசலில் வச்சு ஒரு மஞ்ச கயிறு கட்டினேன். நேரா எங்க வீட்டுக்கு போனேன் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்னு சொன்னேன். எல்லாம் சும்மா அதிர்ச்சியில் உறைஞ்சு போனாங்க, எனக்கு அப்புறம் தான் என் நண்பன் ஒருத்தன் மூலம் தெரியவந்துச்சு. எங்க வீட்ல தான் எல்லா திருகள் வேலையும் செஞ்சுருக்காங்கனு.

முன்ன ரெண்டு பேரோட வீடும் ஒரே statusல இருந்துச்சு, இப்போ நான் கொஞ்சம் சம்பாரிக்க ஆரமிச்சதும் சொந்தகாரன் எல்லாம், ஆகா தினேஷ் நல்ல சம்பாரிக்க ஆரமிச்சுட்டான்னு பொண்ணு தர ரெடி ஆயிட்டாங்க. இதனால என் அம்மா, அப்பா சொந்தக்காரன் எல்லாம் சிந்து பத்தி தப்பா பேசினா நான் மனசு மாறிடுவேன்னு நினச்சுருக்காங்க. இப்படியும் இருகாங்க என்ன பண்றது, கல்யாணம் பண்ணி ஒரு மூணு மாசம் தான் சார் மீண்டும் சிங்கப்பூர் பயணம். முன்னைவிட ஒரு வெறியோட உழைச்சேன், இன்னைக்கு தேதியில என் கிராமத்துல என் வீடு தான் பெரிய வீடு, அதுல மஹாராணியாட்டமா இருக்கா சார் என் சிந்து.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ‘பாட்ஷா’ கெட்டப்பில் வந்து அதிர வைத்த ரஜினிகாந்த் – 27 ஆண்டுகளுக்கு பின் வீடியோ வெளியிட்ட “NOISE AND GRAINS” நிறுவனம்

ரெண்டு குழந்தைகள், பெருசு இப்போதான் ஸ்கூல் போக போகுது, சிந்து வேலைக்கு போகவேண்டிய அவசியம் இல்ல, இருந்தாலும் அவளும் ஒரு நல்ல இடத்துல வேலைக்கு போயிட்டு வரா. எங்கள பிரிக்கணும்னு நினச்ச பய எல்லாம் ரத்த கண்ணீர் வடிக்கிறான் சார். ஆனா எனக்கு யார் மேலயும் எந்த வன்மமும் இல்ல, கொஞ்ச நாள் முன்னாடி தான் அம்மா தவறிட்டாங்க, அப்பா என்கூட தான் இருக்காரு. சும்மா சொல்லக்கூடாது அவளோட அப்பா மாதிரி பாத்துப்பா. வாழ்கை நிறைவா இருக்கு, சிங்கப்பூர்ல சம்பாரிச்ச காசுல நல்ல பிசினஸ் பண்றேன்.

மனைவி அமைவதெல்லாம் உண்மையில் இறைவன் கொடுத்த வரம் தான் சார், எல்லாருக்கும் நான் சொல்றது ஒன்னு தான். வாழ்க்கையில சோதனை எந்த ரூபத்துல வேணாலும் வரும் அத சமாளிக்க கத்துக்கோங்க அவ்ளோதான் சார்.. என்று முடித்தார் தினேஷ்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts