சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நீடித்து வரும் சவால்களைச் சமாளிக்க சிங்கப்பூர் வணிகங்கள் தொடர்ந்து உதவியைப் பெறும் என்று இந்த 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்களில் நமது நிதியமைச்சர் லாரன்ஸ் தெரிவித்தார். இந்த தொற்று பரவல் மூன்று ஆண்டுகளை நெருங்கும் இந்த நேரத்திலும் அதன் தாக்கத்துடன் இன்றளவும் போராடும் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வணிகங்கள், வணிக ஆதரவு தொகுப்பு மூலம் $500 மில்லியனை பெறுவார்கள்.
சிங்கப்பூரில் உள்ள தகுதியான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஒரு உள்ளூர் ஊழியருக்கு $1,000 என்ற அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படும். அதே போல இந்த ஆதரவு ஒரு நிறுவனத்திற்கு $10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை உணவு மற்றும் குளிர்பானம், சில்லறை விற்பனை மற்றும் கலை மற்றும் கலைக் கல்வி போன்ற பரந்த அளவிலான துறைகளில் உள்ள SME-களை உள்ளடக்கியது. விளையாட்டு வசதிகள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், வரலாற்று தளங்கள், உட்புற விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற குடும்ப பொழுதுபோக்கு மையங்களை நடத்துபவர்களும் இந்த திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
இந்த திட்டத்திற்கு தகுதி பெற அந்த நிறுவனங்களின் வருடாந்திர செயல்பாட்டு வருவாய் $100 மில்லியனுக்கும் குறைவாக இருக்க வேண்டும். அல்லது கடந்த ஆண்டு டிசம்பர் 31ல் 200-க்கும் குறைவான பணியாளர்களை பணியமர்த்தியிருக்க வேண்டும். உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தாத சிங்கப்பூர் உணவு ஏஜென்சி உரிமம் பெற்ற வணிகர்கள், சந்தை மற்றும் காஃபிஷாப் கடைக்காரர்கள், இதற்கு தகுதி உடையவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
நிதியமைச்சர் லாரன்ஸ் வோங், இந்த ஆண்டு நிலையான மீட்சியைக் காணமுடியும் என்று அரசு எதிர்பார்ப்பதாக கூறினார். “உலகப் பொருளாதாரம் மீட்சியடையும் நேரத்தில் சிங்கப்பூரும் தொடர்ந்து பயனடையும் என்றும். உலக அளவில் பரவலான தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்து வருவதால் அமெரிக்கா மற்றும் யூரோப்பகுதி போன்ற முக்கிய பொருளாதாரங்களில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றார் அவர். தொற்றுநோயால் தொடர்ந்து வருமான இழப்பைச் சந்திக்கும் தொழிலாளர்கள் கோவிட்-19 மீட்பு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம், இது இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காரணமாக வேலை இழந்த அல்லது ஊதியம் இல்லாத விடுப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு $700 வரை மானியம் வழங்குகிறது இந்த திட்டம். JGI எனப்படும் வேலைகள் வளர்ச்சி ஊக்கத்தொகை செப்டம்பர் வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று திரு வோங் கூறினார். “இந்த நீட்டிப்பு ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக வேலை செய்யாத முதிர்ந்த தொழிலாளர்கள், ஊனமுற்ற நபர்கள் மற்றும் முன்னாள் குற்றவாளிகள் போன்ற வேலைகளை கண்டுபிடிப்பதில் அதிக சிரமத்தை எதிர்கொள்பவர்களை உள்ளடக்கும்,” என்றும் அவர் கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கடந்த செப்டம்பர் 2020 இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் JGI திட்டம் ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.