இரும்பு பைப் திருடிய முதியவரை இரவு முழுவதும் கட்டி வைத்து, தண்ணீர் தராமல் துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ. வயது 55. இவர் ராசிபுரத்தில் உள்ள டாஸ்மாக் எதிரே வெல்டிங் கடையில் நள்ளிரவு நேரத்தில் தொடர்ந்து இரும்பு பைப் திருடி வந்திருக்கிறார். கடந்த சில நாட்களில் 5க்கும் மேற்பட்ட பைப்களை திருடியிருப்பதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட பைப்களை விற்று மது அருந்தி வந்திருக்கிறார்.
இவர் தான் திருடுகிறார் என்பது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவரை பல முறை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனாலும், இளங்கோ தொடர்ந்த திருடுவதை நிறுத்தவில்லை. சமீபத்தில் Hardware கடை ஒன்றில் திருடியிருக்கிறார். இவர் திருட வருவார் என்று நள்ளிரவு நேரத்தில் அந்த கடையின் உரிமையாளர் மறைந்து காத்திருந்திருக்கிறார். வழக்கம் போல இளங்கோ சென்று பைப்பை திருட, அங்கேயே கையும் களவுமாக சிக்கினார்.
அப்போதே அவரை அடித்து உதைத்த கடையின் உரிமையாளர், அருகே இருந்த மரத்தில் கட்டி வைத்திருக்கிறார். இளங்கோ தண்ணீர் கேட்டு எவ்வளவோ கெஞ்சியும், உரிமையாளர் தண்ணீர் கொடுக்கவில்லை. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ராசிபுரம் போலீசார் அங்கு விசாரணை நடத்தி பின் இளங்கோவை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர் திருடியது தவறு என்றாலும், விடிய விடிய மரத்தில் கட்டி வைத்து, அவர் தண்ணீர் கேட்டு கெஞ்சியும் ஒரு சொட்டு கூட கொடுக்காமல் வைத்து அடித்தது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கடையின் உரிமையாளர், உடனடியாக இளங்கோவை காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல், மரத்தில் கட்டி வைத்து தண்ணீர் கொடுக்காமல் இருந்ததற்கு அவரையும் கைது செய்ய வேண்டும் என்ற பலரும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நக்கீரன் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.