புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த நெல் வியாபாரி அப்துல்லாவுக்கு ஆசாத், ரியாஸ் எனும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், 19 வயதான மூத்த மகன் ஆசாத், சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ஆசாத், தனது நண்பர்களான வினோத், பழனிச்சாமி ஆகியோருடன் மேலப்பழுவஞ்சி கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு மற்றொரு நண்பரான அபிநாத் என்பவரின் விவசாய கிணற்றில் அனைவரும் குளித்திருக்கின்றனர்.
அப்போது கிணற்றில் குதித்து சாகசம் செய்வதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதிக லைக்ஸுக்கு ஆசைப்பட்டு வீடியோ எடுக்க நினைத்தனர்.
அதன்படி ஆசாத், வினோத் ஆகிய இருவரும் கிணற்றின் மேல் நின்று டைவ் அடிக்க, அதை அபிநாத் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். முதலில் குதித்த வினோத், அதன்பின்னர் குதித்த ஆசாத் ஆகிய இருவரும் உடனே வெளியே வராததால், மற்ற நண்பர்கள் இருவரும் சந்தேகம் அடைந்தனர்.
இருவரும் செத்துவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் சில நொடிகளில் வினோத்தும், ஆசாத்தும் தண்ணீரில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது வினோத் நீந்தி கிணற்றுக்கு வெளியே வந்துவிட்ட நிலையில், தண்ணீருக்கு மேல் வந்த ஆசாத், மீண்டும் நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டார்.
நண்பர்கள் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஆசாத் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடலை உடற்கூர்வு ஆய்வு செய்ய, அன்னவாசல் போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
இதில், ஆசாத் கிணற்றில் விழுந்த போது, அவர் நேராக சென்று கற்களில் மோதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், தான் அவர் மேலே எழும்பி வந்தும், மீண்டும் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முழு வீடியோவை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்