லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சீனாவின் ஷங்ஹாய் நகருக்கு 250 பயணிகளுடன் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, விமானி தனது கடவுச்சீட்டை எடுத்து வர மறந்துவிட்டதால் பாதி வழியில் சான் பிரான்சிஸ்கோவிற்கு திருப்பிவிடப்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (மார்ச் 22) நடந்துள்ளது.
விமானம் புறப்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு விமானி தனது கடவுச்சீட்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. விமானத்தில் 250 பயணிகளும் 13 சிப்பந்திகளும் இருந்தனர்.
சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும், பயணிகளை கவனித்துக் கொள்வதற்காக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் மற்றொரு சிப்பந்திக் குழு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகள் மற்றும் உரிய இழப்பீடும் வழங்கப்பட்டது. அன்றைய தினமே, மாற்று சிப்பந்திக் குழுவுடன் பயணிகள் அனைவரும் ஷங்ஹாய் நகருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த எதிர்பாராத தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிலர் தங்களது பயணத் திட்டங்கள் இதனால் முற்றிலும் பாழாகிவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர். மேலும், ஒரு விமானத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் விமானி இவ்வளவு முக்கியமான ஆவணத்தை மறந்தது அவரது பொறுப்பற்ற தன்மையையும், நிறுவனத்தின் கட்டொழுங்கையும் கேள்விக்குள்ளாக்குவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
பைலட் இல்லாமல் எங்களை ஏன் ஏற்ற வேண்டும்? ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு!