TamilSaaga

சிங்கப்பூர் குடிமகன் இந்தியாவை விட்டு வெளியேற தடை.. என்ன நடந்தது?

மும்பையில் ஒரு முக்கிய வழக்கில் சிக்கியுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மகளின் அறுவை சிகிச்சைக்கு கூட சிங்கை திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷரத்குமார் கெஜரிவால் என்பவரிடம் 3.25 கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றியதாக எழுந்த புகாரை மையமாகக் கொண்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹேம் பிரபாகர் ஷா, இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். 2019 செப்டம்பரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 420 (மோசடி) மற்றும் பிரிவு 34 (குற்றத்தில் பங்கு கொள்ளும் பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஷா, 2019 டிசம்பரில் தலைமறைவானதால், மகாராஷ்டிர அரசு இவருக்கு எதிராக Look-Out Circular (LOC) வெளியிட்டது. 2024 ஆகஸ்டில், சிங்கப்பூரில் இருந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இறங்கியபோது, Immigraton அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,தனது 22 வயது மகளின் தாடை அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு தற்காலிகமாக பயணிக்க அனுமதி கோரி, இவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்து, விசாரணை முடியும் வரை இந்தியாவை விட்டு வெளியேற தற்போது தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க: 2025-ல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்ல…: BCA Approved skill Test Centre எத்தனை உள்ளது?

மோசடியின் விவரங்கள்

ஷா தவறான முதலீட்டு வாக்குறுதிகள் மும்பை தொழிலதிபர் ஷரத்குமாரிடம் அளித்து, உயர் லாபம் தருவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்தை தவறாக பயன்படுத்தி, முதலீட்டாளருக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

நீதிமன்றத்தின் முடிவு மற்றும் காரணங்கள்

மும்பை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு, நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் ஃபிரோஷ் பி. பூனிவாலா தலைமையில், ஷாவின் பயண அனுமதி மனுவை நிராகரித்ததன் முக்கிய காரணங்கள்:

விசாரணையின் முக்கியத்துவம்: 30 நாட்களுக்குள் விசாரணை முடிவடைய வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில் பயண அனுமதி வழங்குவது பொருத்தமற்றது என்று கருதுகிறது.

தப்பிக்கும் ஆபத்து: ஷா ஒரு வெளிநாட்டவர் என்பதால், இந்தியாவுக்கு திரும்பாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றம் கருதியது. “இந்தியாவில் உடனடி குடும்ப தொடர்பு இல்லாதவர், எளிதாக திரும்பி வருவதை உறுதி செய்ய முடியாது,” என்று நீதிமன்றம் கூறியது.

அறுவை சிகிச்சையின் அவசரமின்மை: ஷாவின் மகளின் தாடை அறுவை சிகிச்சை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட (elective) அறுவை சிகிச்சையாக இருப்பதால், அவசர தேவை இல்லை. மேலும், ஷாவின் மனைவி மற்றும் மற்றொரு மகள் ஏற்கனவே சிங்கப்பூரில் இருப்பதால், அவர்கள் இந்த சிகிச்சையை கவனிக்க முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

விசாரணையில் ஒத்துழைப்பின்மை: பொது வழக்கறிஞர் கெளரி ராவ், ஷா விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அவரிடம் கோரப்பட்ட வங்கி அறிக்கைகளை வழங்கவில்லை என்றும் வாதிட்டார். ஆனால், ஷாவின் வழக்கறிஞர் குஷால் மோர், தேவையான வங்கி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் வழக்கின் தீவிரத்தையும், விசாரணையின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, ஷாவின் மனுவை நிராகரித்தது. விசாரணை முடிந்த பிறகு, மீண்டும் பயண அனுமதி கோரலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முந்தைய சட்ட மீறல்

ஷா, 2024 ஆகஸ்டில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோது, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) பற்றி தெரியாது என்று வாதிட்டார். மேலும், 2019-ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, காவல்துறை தன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை என்று கூறினார். 2024 செப்டம்பரில், நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே தலைமையிலான பிரிவு அமர்வு, ஷாவின் கைது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 50 (கைது காரணங்களை தெரிவிக்க வேண்டியது) மற்றும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22(1) (கைது மற்றும் தடுப்பு பாதுகாப்பு) ஆகியவற்றை மீறியதாக கூறி, சட்டவிரோதமானதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts