வெளிநாட்டு வேலை என்பது எளிதல்ல என்பதை தங்கள் தாய் மண்ணை விட்டு சென்று பிற நாடுகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அறிந்ததே. அதே போல வெளிநாட்டு வேலையை தேர்வு செய்யும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பல நாட்டு அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவின் தமிழகத்தில் உள்ள கோவை மாநகரில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. கோவை வடவள்ளி என்ற பகுதியில் இயங்கி வந்த SS Construction Offboard Tourist and Travels என்ற நிறுவனம் பலரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேற்குறிய நிறுவனம் நமது சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளதாக வடவள்ளி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் இயங்கி வந்த அந்த நிறுவனம் செய்தித்தாளில் சிங்கப்பூர் வேலை குறித்து விளம்பரம் அளித்ததாக கூறப்படுகிறது.
என்ஜினீயர், அலுவலக அட்மின், டிரைவர் உள்ளிட்ட பல பணிகளுக்கு ஆட்கள் தேவையென்று கூறி விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த நிறுவனத்திடம் பணம் கொடுத்துள்ளனர். இறுதியில் பணம் செலுத்தியவர்களுக்கு விமான டிக்கெட், சென்னை சென்று பெருந்தொற்று சோதனை உள்ளிட்டவை சென்று 8ம் தேதி எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வேலைக்கு தேர்வானவர்களை அழைத்து செல்ல 8ம் தேதி வண்டி வரும் என்று கூறிய நிலையில் 8ம் தேதி அப்படி எந்த வாகனமும் வராத நிலையில் பணம் கட்டிய அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது எந்தவித பதிலும் கிடைக்கவில்லை,இறுதியாக நேரில் சென்று பார்த்தபோது அந்த நிறுவன கதவுகள் பூட்டியிருந்ததை கண்டு பணம் கொடுத்தவர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.
இந்நிலையில் தான் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 3 கோடி வரை அந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. தற்போது அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றது.