TamilSaaga

“இது ரொம்ப நாளாக நடக்குது” : சிங்கப்பூரில் தந்தையின் அதிரடி முடிவால் அம்பலமான “தாயின்” கொடூர செயல்

சிங்கப்பூரில் தனது மூத்த குழந்தையின் முன் பற்களை உடைத்து, ஆறு மற்றும் 10 வயதுடைய தனது இரண்டு மகள்களை துன்புறுத்திய இல்லத்தரசி ஒருவருக்கு இன்று புதன்கிழமை (செப்டம்பர் 29) நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை அந்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்தபோது அந்த மூத்த மகளின் பற்கள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது தான் அந்த பெண்ணின் கொடூர செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உடனே அந்த தந்தை, குழந்தையை KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு (KKH) கொண்டு சென்றுள்ளார், பின்னர் மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 16 அன்று, இப்போது 38 வயதாகும் அந்த தாய் தனது மகள்களை துன்புறுத்தியதையும் அவர் மேல் சாட்டப்பட்ட ஏழு குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டார். தீர்ப்பின் போது இதே போன்ற நான்கு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை பாதுகாக்க பெயரிட முடியாத அந்தப் பெண்ணுக்கு, நீதிமன்ற ஆவணங்களின்படி வயது குறிப்பிடப்படாத ஒரு மகனும் உள்ளார்.

மேலும் குற்றத்தின் போது அந்த பெண் எந்த மனநோயாலும் பாதிக்கப்படவில்லை என்று ஒரு மனநல அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2018ல், அந்த பெண்ணின் கணவர் குழந்தைகளை தனியாக விட்டுச் சென்ற சந்தர்ப்பங்களில் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க அவர்களின் வீட்டு அறையில் ஒரு சிசிடிவி கேமராவை நிறுவினார். இதனையடுத்து கடந்த ஜூன் 18, 2019 அன்று, மூத்த பெண்ணின் முன் பற்கள் உடைந்ததை அவர் கண்டுபிடித்தார். “தாய் தன்னை அடித்து உதைத்ததால் அவளது வாயில் இரத்தம் வழிந்தது” என்று தந்தையிடம் கூறியுள்ளார் அந்த சிறுமி.

இதனையடுத்து தந்தை பின்னர் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தபோது, ​​மற்ற சமயங்களில் அவரது மனைவி இரு மகள்களையும் தாக்கியதை கண்டுபிடித்தார். நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சிகளின் பல கிளிப்களில், அந்த பெண் சிறுமிகளை அறைந்து, கிள்ளி, உதைத்து தாக்கியதை காணமுடிந்தது. பல ஆண்டாளாக இந்த கொடுமையை அனுபவித்து வருவதாக அந்த மூத்த மகள் கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related posts