சிங்கப்பூரில் சட்டவிரோதமாக குதிரைப்பந்தய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், கொரோனா பரவல் காலத்தில் உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்துக்காகவும் சந்தேகத்தின் பேரில் 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.
அந்த 13 ஆடவர்கள் 57 வயது முதல் 82 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முறையே ஜூலை 3 மற்றும் 7ம் தேதிகளில் உட்லண்ட்ஸ் மற்றும் மார்சிலிங் ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் 3100 வெள்ளிக்கும் அதிகமாக ரொக்கம், இரண்டு கைப்பேசிகள் மற்றும் பந்தய சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது அந்த ஆடவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 5000 வெள்ளி அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் சட்டவிரோதமாக பந்தயம் நடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆயிரம் முதல் 2 லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.