லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான Henley & Partners மற்றும், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) வழங்கிய பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் 2022ம் ஆண்டிற்கான Henley Indexஐ தற்போது வெளியிட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, உலகம் COVID-19 தொற்றுநோயை சமாளித்து வரும் இந்த இக்கட்டான நிலையில், 2022ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஜப்பானும் நமது சிங்கப்பூரும் முதலிடத்தில் உள்ளன. இந்த இரண்டு நாடுகளின் VFS எனப்படும் Visa Free Score மதிப்பெண் 192ல் உள்ளது.
மேலும் இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் தரவரிசை 111 மற்றும் ஈராக் தரவரிசை 110ல் உள்ளது. இந்த நாடுகளின் VFS முறையே 26 மற்றும் 28 மதிப்பெண்களுடன் கடைசியில் உள்ளது. வெளியான அறிக்கையின்படி, ஜப்பானிய குடிமக்கள் உலகெங்கிலும் உள்ள 192 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகல் உள்ள இடங்களுக்குச் செல்லலாம். முதலாம் இடத்தை 192 மதிப்பெண்ணுடன் ஜப்பானுடன் பகிர்ந்துள்ளது நமது சிங்கப்பூர். தென் கொரியா 190 மதிப்பெண்ணுடன் இருக்கும் நிலையில் ஜெர்மனியும் அந்த இடத்தை தென் கொரியாவோடு பகிர்ந்துள்ளது.
பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் போன்ற நாடுகள், 189 மதிப்பெண்களுடன் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளன. அதே போல அண்டை நாடான இந்தியா தனது தரவரிசையை இந்த ஆண்டு மேம்படுத்தியுள்ளது மற்றும் இந்தியாவின் VFS 60 ஆகும். உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அறிக்கையில் முந்தைய வருடம் 90வது இடத்தில் இருந்து தற்போது 83வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.
தரவரிசையில் உள்ள முதல் 10 நாடுகள் பின்வருமாறு…
- ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் (192)
- ஜெர்மனி, தென் கொரியா (190)
- பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் (189)
- ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் (188)
- அயர்லாந்து, போர்ச்சுகல் (187)
- பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, லண்டன், அமெரிக்கா (186)
- ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ், மால்டா (185)
- போலந்து, ஹங்கேரி (183)
- லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (182)
- எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவேனியா (181)