TamilSaaga

Exclusive : 40 இந்திய தொழிலாளர்கள் – திருச்சியில் இருந்து சிங்கப்பூர் பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

உலக அளவில் பெருந்தொற்று காரணமாக பன்னாட்டு வணிகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வேலை செய்யும் ஊழியர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த பெருந்தொற்று பரவல் அதிகமா காணப்பட்ட காரணத்தால் அண்டை நாடான இந்தியா மற்றும் பிற பல நாடுகளில் இருந்து ஊழியர்கள் சிங்கப்பூர் வர தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தடை அண்மைக்காலமாக தளர்வு பெற தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு Scal எனப்படும் Singapore Contractors Association Ltd நிறுவனத்தின் உதவியால் மிகுந்த பாதுகாப்புடன் சென்னையில் இருந்து 100க்கும் அதிகமான பணியாளர்கள் வெவ்வேறு பணிகளுக்காக சிங்கப்பூர் அழைத்துவரப்பட்டதாக தகவல் வெளியானது

இதனையடுத்து கடந்த செவ்வாயன்று (ஜூலை 20) மேலும் 40 பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் அரசின் பிரத்தியேக அனுமதி கடிதம் பெற்று சிங்கப்பூர் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் இங்குள்ள வெவ்வேறு வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் மற்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் உதவியோடு தங்களுக்கு தேவையான அந்த 40 பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட 40 பணியாளர்களுக்கும் சிங்கப்பூர் அரசு சிறப்பு அனுமதி கடிதம் வழங்கியுள்ளது. மேலும் அந்த 40 பயணிகளை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் அழைத்துவர இந்தியாவில் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கும் சிறப்பு அனுமதியொன்றையும் அளித்துள்ளது. இதனையடுத்து தற்போது திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ள 40 தொழிலாளர்கள் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு அவரவர் பணியிடங்களுக்கு அனுப்பப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து சிங்கப்பூர் அரசு மீண்டும் வெளிநாட்டு தொழிலாளர்களை மெல்ல மெல்ல உரிய உச்சகட்ட பாதுகாப்போடு சிங்கப்பூர் அழைத்துவர தொடங்கியுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் அவர்களாக சிங்கப்பூர் வருவது கடினமே. சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள், அனுபவம் வாய்ந்த ஏஜென்சிகள் மற்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சக உதவியோடு தற்போது பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. ஆகையால் தொழிலாளர்கள் உங்களுக்கான முறை வரும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

வரும் காலங்களில் அதிக அளவிலான பணியாளர்கள் இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி

Related posts