சிங்கப்பூரில் பேருந்து சேவை எண் 175-ல் பயணித்த ஓர் பயணி தனது நிறுத்தம் வரவிருப்பதை அறிந்து இருக்கையில் இருந்து எழுந்து நின்ற நிலையில் டிரைவர் போட்ட “சடன் பிரேக்கால்” பேரூந்துக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டார். வயதான அந்த பயணி இருக்கையில் இருந்து எழுந்து நிற்கும் போது, சாலையின் வலதுபுறத்தில் இருந்து கார் ஒன்று நார்த் பிரிட்ஜ் சாலையில் இடதுபுறம் திரும்புவதற்கான சிக்னல்லை அளித்து முன்னேறியுள்ளது. முன்னால் செல்லும் சாலையில் கவனம் செலுத்திய பேருந்து ஓட்டுநர், அந்த கார் தனது பாதையில் திரும்புவதைப் பார்த்ததும் காருடனான மோதலைத் தவிர்க்க திடீரென பிரேக்கைப் பயன்படுத்தியுள்ளார்.
டிரைவர் சட்டென்று பிரேக் போட்ட நிலையில், திரு. சியா கியோக் தியாங் என்ற 68 வயது பயணி பேருந்தின் முன்பக்கமாக தூக்கி வீசப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மற்றும் அவரது விலா எலும்புகள் உடைந்து. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சுமார் 8 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார் என்று இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரி (Inspection Officer) ஃபிர்தாஸ் சுலைமான் தனது பதிலை நேற்று வியாழக்கிழமை (மார்ச் 10) அன்று மாநில விசாரணை அதிகாரி ஆடம் நகோடாவிடம் வழங்கினார்.
இந்த வழக்கின்போது திரு. சியாவின் மகள், திருமதி. சியா ஹ்வான் லிங் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் இருந்தனர் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. உடல்நலப் பரிசோதனைக்காக அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள டயாலிசிஸ் மையத்திற்குச் சென்ற பிறகு காலை 11.30 மணியளவில் திரு. சியா பேருந்தில் ஏறியதாக காவல்துறை அதிகாரி கூறினார். வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த திரு சியா, நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள Bugis Cubeக்கு முன் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
அவரும், பேருந்து தனது நிறுத்தத்தை நெருங்கியதும், டிரைவரிடம் கூறுவதற்காக எச்சரிக்கை மணியை அழுத்திவிட்டு, முறையாக இருக்கையில் இருந்து எழுந்து மேல் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றுள்ளார். ஆனால் டிரைவர் போட்ட அந்த பிரேக் அவர் உயிரையே குடித்துள்ளது. சீனியர் ஸ்டாஃப் சார்ஜென்ட் ஃபிர்தௌஸ் தெரிவித்த தகவலின்படி : CCTV காட்சிகளின் அடிப்படையில், மோட்டார் கார் திடீரென பேருந்தின் பாதையில் நுழைந்து தான், பேருந்து ஓட்டுநர் தனது பிரேக்கை சட்டென்று போட காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேருந்து ஓட்டுநரும் குறிப்பிட்ட வேக அளவிற்கு கீழ் தான் பேருந்தை இயக்கியுள்ளார் என்றும், கடந்து சென்ற அந்த காரும் சரியான பாதையில் தான் பேருந்தை overtake செய்து சென்றுள்ளது என்றும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.