TamilSaaga

4 நாட்களில் 2 தமிழக ஊழியர்களை பறிகொடுத்துள்ள சிங்கப்பூர்.. துக்க தினமாக மாறிய ஞாயிறு

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த ஞாயிறு நிச்சயம் அவ்வளவு இலகுவான, வழக்கமான ஒரு ஞாயிறாக இருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில், கடந்த 4 நாட்களில் மட்டும் இரு தமிழக ஊழியர்களின் உயிரை பறிகொடுத்துள்ளது சிங்கப்பூர். அவர்களின் குடும்பம் இந்த நொடி செய்வதறியாது நிற்கிறது.

சிங்கப்பூரில் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், கடந்த ஜூன்.22ம் தேதி காலை 10.15 மணியளவில் நிகழ்ந்த கிரேன் விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பெரியசாமி ராஜேந்திரன் எனும் ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கிரேனின் சேஸின் அடியில் அமைந்துள்ள கருவிப்பெட்டியில் இருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, கிரேன் கடிகார திசையில் திரும்பி அவரை நசுக்கியதாக MOM தெரிவித்தது. இறந்த பெரியசாமி ராஜேந்திரன் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. குறிப்பாக இவரது வயது வெறும் 32 மட்டுமே.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 84 வயது முதியவரும், 14 வயது பேத்தியும் ஒரே நாளில் மரணம்.. வெவ்வேறு இடங்களில் கிடந்த சடலம் – 5 நிமிட கேப்பில் சிங்கை போலீசாரை திணற வைத்த சம்பவம்!

இந்த கோர சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் சிங்கப்பூரில் அடுத்த ஒரு துக்க நிகழ்வாக மற்றோரு தமிழக ஊழியரின் மரணம் அமைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் தூண்டி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தார். இவரது மகன் தான் வீரையா (வயது 48).

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் தான் வேலை செய்து வந்த தூண்டி வீரையா, கப்பல் கட்டுமானத் துறையில் ‘Painting Inspector’ பொறுப்பில் இருந்தவர். இந்நிலையில், ஜூன்.23ம் தேதி மதியம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிய வீரையா வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

குடும்பத்துக்காக உழைத்து தங்கள் உயிரை பறிகொடுத்த இரு ஊழியர்களின் ஆன்மாக்களும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts