சிங்கப்பூர் மட்டுமல்ல உலக அளவில் பல இளைஞர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்ததும் அவர்கள் தேடுவது சொந்த ஊரிலேயே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை, அல்லது பிற நாடுகளில் ஒரு நல்ல வேலை அவ்வளவுதான். 70 சதவிகித இளைஞர்களின் அதிகபட்ச கனவே இதுதான் என்றே கூறலாம்.
ஆனால் தடைகளை தாண்டி தனக்கென தனி தொழில் ஒன்று துவங்கும் இளைஞர்களை இந்த காலத்தில் வெகு குறைவான அளவிலேயே காணமுடிகிறது. அந்த வகையில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா என்ற பட்டதாரி தற்போது தனக்கென தனி பாதை ஒன்று வகுத்து அதில் பயணிக்க துவங்கியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பொருளாதார படிப்பில் தனது இளங்கலை பட்டத்தை படித்து முடித்தார் பிரியங்கா. ஆனால் அதற்கு பிறகு சரியான வேலை எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது தானும் ஒரு வியாபாரியாக மாற முடிவெடுத்துள்ளார். பாட்னா நகரில் உள்ள ஒரு மகளீர் கல்லுரி முன் தனது டீ கடையை திறந்துள்ளார் பிரியங்கா.
வடக்கில் பொதுவாக டீ விற்கும் ஆண்களை “சாய்வாலே” என்று அழைப்பார்கள், ஆகவே பிரியங்கா தனது கடைக்கு “சாய்வாலி” என்று பெயரிட்டுள்ளார். எத்தனை நாள் தான் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது, அதனால் தான் இந்த முடிவினை எடுத்ததாகவும். நாட்டில் பல “சாய் வாலாக்கள்” இருக்கும்போது ஏன் ஒரு “சாய் வாலி” இருக்க கூடாது என்று கூறி மன நிறைவோடு தனது தொழிலை நடத்தி வருகின்றார் அவர்.
இந்தியாவில் MBA Chai Wala என்ற கடையை ஆரம்பித்து இன்று மிகப்பெரிய தொழிலதிபராக உள்ள பிரஃபுல் பில்லோரி தான் தனக்கு இன்ஸ்பிரஷன் என்று கூறுகின்றார் பிரியங்கா.
நம்மில் பலரும் சொந்த ஊரில் நல்ல வேலை கிடைக்காதா, வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்காதா என்று தான் புலம்புகிறோமே தவிர நமக்கென தனி தொழிலாளி ஆரம்பிக்க இன்றளவும் தயங்கித் தான் வருகின்றோம். வியாபாரம் துவங்குவது எளிதல்ல என்றபோது நமது குடும்ப நிலையை சரிசெய்யும் ஏதோ ஒரு தொழில் செய்து நாமும் முன்னேறலாம் என்பதற்கு பிரியங்கா ஒரு சாட்சி.
நமது கண் முன்னே ஆயிரமாயிரம் வழிகள் திறந்துகிடக்கிறது, ஆனால் நம்மில் சிலர் குறுகிய பார்வைக்கொண்டு பயணிப்பதால் அந்த சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும், வழிகளும் நமக்கு தெரிவதில்லை. தவறான பாதையில் பயணிக்காமல் செய்கின்ற எல்லாமே வெற்றி தரும் என்பதை மனதில் கொண்டு பயணிப்போம்.