சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் உறுதியளித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவை வேலைகளையும் திறன்களையும் மறுவடிவமைக்கும் என்பதால், சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு வேலைநலன் திட்டம் மற்றும் படிப்படியான சம்பள உயர்வு முறை மூலம் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொழில்நுட்ப இடையூறுகள் மற்றும் உலகளாவிய போட்டியால் ஏற்படும் அழுத்தங்களிலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றும் அவர் கூறினார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற மனிதவள அமைச்சின் 70வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் பேசிய அமைச்சர் டான், வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அமைச்சு எடுத்துள்ள மூன்று முக்கிய உத்திகள் குறித்து விளக்கினார்.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரர்களில் நால்வரில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பார் என்பதால், மனிதவள அமைச்சு முதலாளிகளுடன் இணைந்து நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாக்டர் டான் தெரிவித்தார். இது மூத்தோர் வளர்ச்சி அடைவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும்.
மூத்த குடிமக்களின் உற்பத்தித் திறனை நீடிக்கும் வகையில், 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 65 ஆகவும், மறுவேலைவாய்ப்பு வயதை 70 ஆகவும் படிப்படியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இறுதியாக, கூடுதல் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஊழியர்கள் மற்றும் வணிகங்கள் என இரு தரப்புடனும் ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தவுள்ளதாக டாக்டர் டான் கூறினார். மனிதவள அமைச்சு முத்தரப்புப் பங்காளிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் துணைப் பிரதமர் எஸ் ஜெயக்குமார், மனிதவள மூத்த துணை அமைச்சர்கள் ஸாக்கி முகம்மது மற்றும் கோ போ கூன், துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், மனிதவள அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் எங் சி கெர்ன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அமைச்சின் 70ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பேசிய அமைச்சர் டான், மனிதவள அமைச்சிற்குப் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்கு பங்களித்த அதிகாரிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“1955ல் மனிதவள அமைச்சு நிறுவப்பட்டபோது நிச்சயமற்ற சூழல் நிலவியது. அந்த நேரத்தில் இணக்கமான தொழில்துறை உறவுகளுக்கான நீடித்த அடித்தளத்தை அமைத்து, முத்தரப்பு உறவை உருவாக்குவதற்கு மனிதவள அமைச்சு வழிவகுத்தது. இன்றைய போட்டி நிறைந்த பொருளாதாரச் சூழலில், மனிதவள அமைச்சு சிங்கப்பூரர்களின் போட்டித்தன்மையையும் வேலைவாய்ப்புகளையும் வளர்க்கப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது,” என்று டாக்டர் டான் கூறினார்.
தாம் மனிதவள அமைச்சிற்குப் பொறுப்பேற்றபோது, அது கொள்ளைநோய் பரவல் காலமாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். “கோவிட்-19 தொற்றுநோய் பல விஷயங்களைக் கற்றுத் தந்தது. மேம்பாடு தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர் விவகாரங்களில் நாங்கள் கவனம் செலுத்தினோம். ‘டுக்காங் இன்னொவேஷன் லேனில்’ கட்டப்பட்டு வரும் தங்குமிடம் சிங்கப்பூர் எட்டவிருக்கும் உயர் தரநிலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதே நேரத்தில், சிங்கப்பூரர்கள் மீது அக்கறை கொள்ளும் விதமாக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைகளும் பெருமை அளிக்கின்றன,” என்று டாக்டர் டான் விளக்கினார்.
கடந்த 70 ஆண்டுகளில் சிங்கப்பூர் ஊழியரணி அடைந்துள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரின் தற்போதைய வேலையின்மை விகிதம் மூன்று சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தொழிலாளர் பங்களிப்பு ஏறக்குறைய 70 சதவீதமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களின் சம்பளம் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாக மனிதவள அமைச்சின் புதுப்பிக்கப்பட்ட இலச்சினை வெளியிடப்பட்டது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட இந்த இலச்சினை ஏப்ரல் 5ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதோடு, மனிதவள அமைச்சின் 70 ஆண்டுகால வரலாற்றையும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் அமைச்சு அளித்த பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாக நினைவுப் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
“இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மைல்கற்கள் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் ஆற்றிய பங்களிப்புக்கு ஒரு சான்று,” என்று அமைச்சர் டான் குறிப்பிட்டார். இந்த மின்புத்தகத்தை https://www.mom.gov.sg/about-us/mom70 என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.