சிங்கப்பூர், மார்ச் 16: மார்ச் மாத பள்ளி விடுமுறைக் காலம் தொடங்கியுள்ளதால், மலேசியா செல்வோர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இரண்டு மணிநேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) காலை 9.10 மணி நிலவரப்படி, மலேசியா செல்லக் காத்திருக்கும் கார் வரிசை உட்லண்ட்ஸ் அவென்யூ 5, வெளிச்சாலை 10A-ஐத் தாண்டி நீண்டிருப்பதாக ஆணையம் கூறியுள்ளது.
“உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை அடைய இரண்டு மணிநேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இது மலேசியாவிலிருந்து திரும்பி வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது என்று அது விளக்கியது. முன்னதாக, மார்ச் மாத பள்ளி விடுமுறைக் காலம், முஸ்லிம் நோன்புப் பெருநாள் ஆகியவற்றை முன்னிட்டு துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று ஆணையம் எச்சரித்திருந்தது.
மார்ச் மாத பள்ளி விடுமுறைக் காலம் மார்ச் 14 முதல் 24ஆம் தேதிவரை நீடிக்கும். அதற்கு அடுத்து நோன்புப் பெருநாள் காலம் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1ஆம் தேதிவரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவுக்கு கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றில் பயணம் செய்வோர், குடிநுழைவு அனுமதியை எளிதாக்க, கடப்பிதழுக்கு பதில் கியூஆர் குறியீட்டை பயன்படுத்துமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் தொடர்பில் ஜனவரி மாத சீனப் புத்தாண்டு காலத்தில் காரில் பயணம் செய்தோர் குடிநுழைவு அனுமதிக்காக மூன்று மணிநேரத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டியிருந்ததை ஆணையம் நினைவுறுத்தியுள்ளது. மேலும் தகவல்களுக்கு, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடவும்