சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது பலருக்கு ஒரு கனவு. ஆனால், இந்தக் கனவை நனவாக்குவதற்கு முன், ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இடங்களைப் பிடிப்பது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
இதற்கு ஓர் உதாரணமாக, 25 வயது நிதி நிர்வாகியான திருமதி ஜோய்லீன் சென், நவம்பர் 2024 இல் கம்ஃபர்ட் டெல் க்ரோ (ComfortDelGro Driving Centre – CDC) ஓட்டுநர் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். ஆறு மாதங்களில் லைசென்ஸ் பெற்றுவிடலாம் என்று அவர் நம்பினார். ஆனால், ஏழு மாதங்கள் கடந்த பின்னரும், அவரால் மூன்று பயிற்சி கிளாஸ் மட்டுமே பெற முடிந்தது. ஒரு பயிற்சி இடத்தை உறுதிப்படுத்த, டெலிகிராம் தானியங்கி (bot) மூலம் 30 வெள்ளி செலவு செய்ய செய்தார்.
சிங்கப்பூர்ல ஆயிரக்கணக்கான இளைஞர்களோட அனுபவம் இதுதான். இந்தப் பிரச்சனை ஏன் வந்தது, அதுக்கான காரணங்கள் என்ன, இதுக்கு என்ன தீர்வு என்று பார்க்கலாம்.
சிங்கப்பூரில் உள்ள மூன்று முக்கிய ஓட்டுநர் பயிற்சி மையங்கள் – கம்ஃபர்ட் டெல் க்ரோ (CDC), புக்கிட் பாடோக் ஓட்டுநர் மையம் (BBDC), மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு ஓட்டுநர் மையம் (SSDC) – ஆகியவை பயிற்சி இடங்களை முன்பதிவு செய்ய டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்த முறையை தானியங்கி மென்பொருள்கள் (bots) தவறாகப் பயன்படுத்துவதால், மாணவர்கள் இடங்களைப் பிடிப்பது கடினமாக உள்ளது. இந்த ‘பாட்ஸ்’ முறையைப் பயன்படுத்தி, சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்து இடங்களை மற்றவர்களுக்கு விற்கின்றனர். கேரோசல் (Carousell) மற்றும் டெலிகிராம் தளங்களில் ஒரு இடத்திற்கு 30 முதல் 70 வெள்ளி வரை வசூலிக்கப்படுகிறது.
ஓட்டுநர் பயிற்சி மையங்களில் தானியங்கி (bot) பயன்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி மையங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
- BBDC (Bukit Batok Driving Centre) நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஆறாயிரம் கணக்குகளை தடை செய்துள்ளது. மேலும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6,500 கணக்குகளை முடக்கியது.
- CDC (ComfortDelGro Driving Centre) நிறுவனம் 214 கணக்குகளை தடை செய்துள்ளது.
- SSDC (Singapore Safety Driving Centre) நிறுவனமும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், தானியங்கி பயன்பாட்டை முழுமையாகத் தடுப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதை எதிர்கொள்ள, CDC நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது:
மல்டி-ஃபேக்டர் அங்கீகாரம் (Multi-Factor Authentication – MFA): நீங்கள் ஒரு கணக்கில் நுழையும்போது, ஒரே ஒரு password மட்டும் பயன்படுத்தாமல், பல வழிகளில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முறை. உதாரணமாக, password பிறகு, உங்கள் போனுக்கு வரும் OTP மூலம் சரிபார்ப்பது. இது உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
சிங்பாஸ் உள்நுழைவு (Singpass Login): இது சிங்கப்பூரின் தேசிய டிஜிட்டல் அடையாள உள்நுழைவு (Login) முறை. சிங்கப்பூரில் உள்ள அரசாங்க சேவைகள் மற்றும் சில தனியார் சேவைகளில் பாதுகாப்பாக உள்நுழைய இதைப் பயன்படுத்தலாம். உங்கள் அடையாளம் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால், ஒவ்வொரு முறையும் புதிய கணக்கு தேவையில்லை.
மேம்பட்ட இயந்திர கற்றல் (Machine-Learning Algorithms): Bots செயல்பாடுகளைக் கண்டறிந்து தடுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்.
பயிற்சியாளர்கள் பற்றாக்குறை: ஒரு பெரிய தடை:
1987-ல் சிங்கப்பூர் காவல்துறை (Traffic Police – TP) புதிய தனியார் ஓட்டுநர் பயிற்சியாளர் உரிமங்களை வழங்குவதை நிறுத்தியது, இது ஓட்டுநர் கல்வியை தொழில்முறைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு. இதன் விளைவாக, மார்ச் 14, 2025 வரை, சிங்கப்பூரில் 268 தனியார் பயிற்சியாளர் மட்டுமே உள்ளனர், மேலும் இவர்கள் ஓய்வு பெறும்போது இந்த எண்ணிக்கை மேலும் குறையும்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஓட்டுநர் பயிற்சியாளர்களைப் பணியமர்த்துவது மிகவும் சவாலாக மாறியுள்ளது. இதற்குக் காரணங்கள் பல:
வேலை மாற்றம்: ஏராளமான பயிற்சியாளர் தற்போது தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களாகவோ அல்லது உணவு விநியோகப் பணிகளிலோ ஈடுபட்டுள்ளனர்.
குறைவான சம்பளம்: ஓட்டுநர் பயிற்சியாளர்களின் ஆரம்பச் சம்பளம் – மாதம் 2,070 வெள்ளி முதல் 4,500 வெள்ளி வரை.
பிற துறைகளுடன் ஒப்பிடுதல்: இதற்கு மாறாக, SBS ட்ரான்ஸிட் பேருந்து ஓட்டுநர்கள் மாதம் 4,500 வெள்ளி வரை சம்பாதிக்க முடியும். மேலும், அவர்களுக்கு 25,000 வெள்ளி வரை பயிற்சி ஊக்கத்தொகையுடன் பதவி உயர்வு பெறும் வாய்ப்புகளும் உள்ளன.
இதனை ஒரு SSDC பயிற்சியாளர், “நாங்கள் பேருந்து ஓட்டுநர்களை விடக் குறைவாக சம்பாதிக்கிறோம்,” என்று கவலை தெரிவித்தார். இந்தச் சம்பள வேறுபாடுகளும், ஓட்டுநர் பயிற்சியாளர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து நிபுணர் டெரன்ஸ் ஃபேன், தனியார் பயிற்சியாளர் உரிமங்களை மீண்டும் வழங்குவதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். “மாணவர்களுக்கு மையங்களில் இடம் கிடைக்காவிட்டால், தனியார் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இது, குறிப்பாக பொது போக்குவரத்து முன்னுரிமையாக இல்லாத நாடுகளில் பயணிக்கும் சிங்கப்பூரர்களுக்கு ஓட்டுநர் திறன் அவசியமாக இருப்பதால் முக்கியமானது. ஆனால், TP இந்த பரிந்துரையை ஏற்கவில்லை. மாறாக, தகுதியான வெளிநாட்டு பயிற்சியாளர்களை மையங்களில் பணியமர்த்த அனுமதிக்கும் முடிவை எடுத்துள்ளது.
மறுபுறம், மையங்கள் தங்கள் பயிற்சியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிசெய்கின்றன. CDC 2023 முதல் 2024 வரை 10 சதவீதம் பயிற்சியாளர் களை கூடுதலாக பணியமர்த்தியது. மேலும், TP பயிற்சி மற்றும் சோதனை இடங்களை அதிகரிக்க முயற்சிக்கிறது. ஆனால், இந்த முயற்சிகள் இன்னும் முழுமையான தீர்வை வழங்கவில்லை.
ஓட்டுநர் பயிற்சி இடங்களுக்கான நீண்ட காத்திருப்பு: மாணவர்களின் சவால்கள்
ஒரு மாணவர் கூறியதாவது, “சில மாதங்களில் ஐந்து பயிற்சி இடங்கள் கிடைக்கும். ஆனால், சில மாதங்களில் ஒரு இடம்கூட கிடைப்பதில்லை. இதனால், எனது தற்காலிக உரிமத்தை நீட்டிக்க 65 வெள்ளி செலவு செய்ய வேண்டியதாயிற்று” என்றார்.
மற்றொரு மாணவர், இரவு நேர பயிற்சி இடங்களை முன்பதிவு செய்து, தனிப்பட்ட ஓய்வு நேரத்தை தியாகம் செய்து, தனது பயிற்சியை 5 முதல் 6 வாரங்களுக்குள் முடித்துள்ளார். எனினும், இத்தகைய விரைவான பயிற்சி முறை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமானதல்ல என்பதே தற்போதைய யதார்த்தம்.
சமூக ஊடகங்களில் இந்தப் பிரச்சினை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் மற்றும் ஹார்டுவேர் ஜோன் மன்றங்களில், பயிற்சி இடங்களைப் பிடிக்க தானியங்கிகளைப் பயன்படுத்துவது, “இது ஒரு மோசமான முறை” என்று விமர்சிக்கப்பட்டாலும், பலர் இதை ஒரு தவிர்க்க முடியாத தீர்வாக பார்க்கின்றனர். சிலர், “சிங்பாஸ் மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்யலாமே, இது பிரச்சினையை தீர்க்கும்,” என்று பரிந்துரைத்துள்ளனர். மற்றவர்கள், உள்ளூர் பயிற்சியாளர் களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பயிற்சியாளர்களை பணியமர்த்துவது உள்ளூர் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்றும் வாதிடுகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தற்போது சந்தித்து வரும் சவால்களைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
BBDC (Bukit Batok Driving Centre): இந்த மையம் சுவா சூ காங் வேயில் (Choa Chu Kang Way) புதிய பல-அடுக்கு ஓட்டுநர் மையத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளது. இது 2028-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதைய புக்கிட் பாடோக் மையத்திற்குப் பதிலாகச் செயல்படும்.
SSDC (Singapore Safety Driving Centre) மற்றும் CDC (ComfortDelGro Driving Centre): இந்த இரண்டு மையங்களும் தங்கள் வசதிகளை மேம்படுத்துவதோடு, ஓட்டுநர் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சி செய்கின்றன.
ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாகப் பலன் அளிக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுமானப் பணிகள் மற்றும் பயிற்சியாளர் சேர்க்கை போன்ற நடவடிக்கைகள் நிறைவடையக் குறிப்பிட்ட காலம் ஆகும் என்பதால், தற்போதைய காத்திருப்பு காலத்திற்கான உடனடித் தீர்வுகள் என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பயிற்சி வகுப்புகளுக்கு மட்டுமல்லாமல், ஓட்டுநர் தேர்வுகளுக்கும் மாணவர்கள் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த தாமதத்தைக் குறைக்க, போக்குவரத்து காவல்துறை நடைமுறைத் தேர்வு இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இவை நடைமுறைக்கு வரும் வரை, ஓட்டுநர் உரிமத்திற்காக காத்திருக்கும் இளைஞர்கள், இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை தொடரும்.
சிங்கப்பூரின் AI வளர்ச்சிப் பயணம்: 800 பயிற்சி இடங்கள், 500 வணிகத் திட்டங்கள்!