TamilSaaga

வெளிநாட்டவருக்கான Training Employment Passes (TEP) முறைகேடு: நிறுவனங்கள் மீது MOM அதிரடி நடவடிக்கை!

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டு திறமையாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், இந்த திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த வழங்கப்படும் வேலைவாய்ப்பு அனுமதிகள் (Work Passes) சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பயிற்சி வேலைவாய்ப்பு அனுமதி (Training Employment Pass – TEP) தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

 

 

TEP என்றால் என்ன?

Training Employment Pass – (TEP) என்பது, வெளிநாட்டு மாணவர்களையும், வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களையும் சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்கு பயிற்சிக்காக வேலையில் அமர்த்தும் ஒரு சிறப்பு அனுமதி. வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மூன்று மாதங்கள் வரை சிங்கப்பூரில் தங்கி, இங்குள்ள நிறுவனங்களில் பயிற்சி பெற இந்த அனுமதி உதவுகிறது.

ஒரு நிறுவனம் TEP அனுமதி பெற வேண்டும் என்றால், அவர்கள் தங்கள் பயிற்சித் திட்டம் பற்றிய முழு விவரங்களையும், வெளிநாட்டில் உள்ள தங்கள் அலுவலகத்தின் ஆவணங்களையும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்திடம் (MOM) சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சி பெறுபவர்களுக்கு குறைந்தது மாதத்திற்கு 3,000 சிங்கப்பூர் டாலர் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
பயிற்சி பெறும் மாணவர்கள் என்றால், அவர்கள் பெறும் பயிற்சி அவர்களின் படிப்புடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.

சமீபத்தில், வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான Transient Workers Count Too (TWC2) Training Employment Pass (TEP)-கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 2024 டிசம்பர் 1 முதல் 2025 ஏப்ரல் 26 வரை, TWC2 அமைப்பினர் 13 TEP விசா வைத்திருந்த ஊழியர்களைச் சந்தித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் சம்பளப் பிரச்சனைகள் மற்றும் அதிக நேரம் வேலை வாங்குவது பற்றிப் புகார் தெரிவித்துள்ளனர்.

Management executives washing dishes என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கையில், TEP விசா மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள், அவர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு மாறாக, உணவு மற்றும் பான நிறுவனங்கள், கிடங்குகள், துப்புரவு நிறுவனங்கள் மற்றும் ஒரு சுற்றுலா பயண நிறுவனத்தில் கூட வேலை செய்ய அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது TEP விசாக்களின் தவறான பயன்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதை விட மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வந்த உடனேயே கிட்டத்தட்ட உடனடியாக வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும் TWC2 குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமைச்சகத்தின் விதிமுறைப்படி, சிங்கப்பூர் வந்தவுடன் கிட்டத்தட்ட 30 நாட்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு TEP விசாக்கள் வழங்க MOM-க்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், MOM (மனிதவள அமைச்சகம்) வைத்திருக்கும் விதிகளின்படி, TEP விசா வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வந்த 30 நாட்களுக்குள் தங்கள் அனுமதியைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். ஆனால், இந்த ஊழியர்களுக்கு அந்த நடைமுறை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் TWC2 அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் TEP விசாக்களைப் பயன்படுத்தி ஒரு பெரிய “வேலை மோசடி” நடப்பதாகவும், இது வேகமாகப் பரவி வருவதாகவும் TWC2 அமைப்பு எச்சரித்துள்ளது.

MOM-ன் பதில்

இந்தக் குற்றச்சாட்டுகளைத் “தீவிரமாக” எடுத்துக்கொண்டுள்ளதாக MOM தெரிவித்துள்ளது. CNA செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த மனிதவள அமைச்சகம், சில புகார்கள் குறித்த விசாரணைகளை முடித்துவிட்டதாகவும், மற்றவை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறியது.

முடிந்த விசாரணைகளின் முடிவுகளை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று MOM குறிப்பிட்டாலும், TEP விண்ணப்பங்களைச் சரிபார்க்கும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், TEP-களைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சகம் எச்சரித்தது. இதில், அந்த நிறுவனங்களின் வேலை அனுமதி உரிமைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, அபராதம் விதிப்பது, மற்றும் அவர்கள் செய்த தவறு எந்த அளவுக்குப் பெரிதோ அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுப்பது போன்றவையும் அடங்கும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் MOM-ஐ அணுகி உதவி பெறலாம் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னை சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு சந்தையில் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலாவதாக, TEP-கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பாதிக்கலாம். TWC2-ன் அறிக்கையின்படி, TEP-கள் மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள், உண்மையில் தொழில்முறை பயிற்சிக்கு பதிலாக, குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளில் (எ.கா., பாத்திரம் கழுவுதல், துப்புரவு) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது, சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு அனுமதி கட்டமைப்பை (Work Pass Framework) சுற்றி வளைத்து, உள்ளூர் தொழிலாளர்களுக்கு போட்டியாக அமைகிறது.

S-Pass, Work Permit இல்லையா? TEP பாஸ் மூலம் நீங்கள் சிங்கப்பூர் வரலாம்!

இரண்டாவதாக, இந்த முறைகேடுகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் நலனை பாதிக்கின்றன. ஊதிய முறைகேடுகள், நீண்ட நேர வேலை, மற்றும் முறையான பயிற்சி இல்லாமை ஆகியவை, இந்தத் தொழிலாளர்களை சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றன.

TEP’ எனப்படும் பயிற்சி வேலைவாய்ப்பு அனுமதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு விதிகளைப் பொறுத்தவரை ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. இது, வெளிநாட்டுத் திறமையாளர்களை வரவழைப்பதற்கும், அதேசமயம் உள்ளூர் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இடையே உள்ள கடினமான சமநிலையைக் காட்டுகிறது.

மனிதவள அமைச்சகத்தின் (MOM) தற்போதைய விசாரணைகள், இந்த முறைகேடுகளைக் கண்டறியவும், அவற்றை நிறுத்தவும் முயற்சி செய்கின்றன. ஆனால், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, கடுமையான கண்காணிப்பு, வெளிப்படையான விதிகள், மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நடைமுறைகள் தேவை.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

 

Related posts