வாழ்க்கை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமானது என்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூரைச் சேர்ந்தவர் முத்தழகு. இவரது மகன் சரவணன். வயது 35. சிங்கப்பூரில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு 6 வயதில் தர்ஷன் என்ற மகனும், 2 வயதில் அட்சயன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், சரவணன் அரசமலை அருகே சாத்தனூரில் நடைபெற்ற முப்பிலி கருப்பர்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள, தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு சென்றார். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிறகு, வல்லத்திராகோட்டையில் நடைபெறவிருந்த தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரசமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் சித்தூர் பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, அந்த வழியில் எதிரே வந்த மற்றொரு பைக் மீது சரவணனின் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
மனைவி அனிதா, பிள்ளைகள் தர்ஷன், அட்சயன் ஆகியோர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். விபத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த 3 பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காரையூர் போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், விபத்து குறித்து காரையூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், உயிரிழந்த சரவணன், இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தது தெரியவந்தது. வந்த இடத்தில், மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் நாட்களை நகர்த்திய சரவணன், இந்த கோர விபத்தில் உயிரிழந்து, இரண்டு குழந்தைகளுடன் மனைவியை தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.