இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரணதண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ஒத்திவைத்த நிலையில் அவரது மனுவை தற்போது நிராகரித்துள்ளது. ஆகையால் அவர் விரைவில் தூக்கிலிடப்படுவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நாகேந்திரன் கே. தர்மலிங்கம் கடந்த 2010ம் ஆண்டு 43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். முந்தைய நீதிமன்ற விசாரணையில், அவரது IQ 69-ஆக இருந்தது என்றும் இது சர்வதேச அளவில் அறிவுசார் குறைபாடு என அங்கீகரிக்கப்பட்டது என்றும் நாகேந்திரன் சார்பாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால் சிங்கப்பூரின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களை மீறி, அவர் தான் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்தே நாகேந்திரன் செயல்பட்டார் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாகேந்திரனின் மேல்முறையீட்டு மனுவை பொறுத்தவரை “சர்வதேச சட்டம் இதில் பொருந்தாது” என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக இந்த வழக்குக்கு உதவிய வழக்கறிஞர் எம்.ரவி தனது பேஸ்புக் வாயிலாக தெரிவித்துள்ளார். நாகேந்திரன் இன்னும் சில நாட்களில் தூக்கிலிடப்படுவார் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கூப்பிடம் மன்னிப்பு கிடைக்காத பட்சத்தில் நாகேந்திரன் உடனடியாக தூக்கிலிடப்படுவார் என இங்கிலாந்தைச் சேர்ந்த உரிமைக் குழு ஒன்றும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. 15 கிராம் (0.5 அவுன்ஸ்) ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய அனைவரும் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி இதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்பதும் நினைவுகூரத்தக்கது.