சிங்கப்பூரின் பரபரப்பான லிட்டில் இந்தியா தெருக்களில் ஒரு காலத்தில் “பிஜிபி ஸ்டோர்ஸ்” (PGP Stores) என்ற பெயர் ஒரு பிரபலமான பிராண்டாக இருந்தது. இந்த வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் பி. கோவிந்தசாமி பிள்ளை (1887-1980), ஒரு தமிழர். 2019-ல் சிங்கப்பூரின் 200-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட 20 டாலர் நாணயத்தில் இவரது உருவம் இடம்பெற்றது. இவரது பயணம், கஷ்டங்களை கடந்து வெற்றி பெற்ற ஒரு கதையாகவும், தமிழ் சமூகத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்திய ஒரு உதாரணமாகவும் அமைகிறது.
யார் இந்த பி. கோவிந்தசாமி பிள்ளை?
தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள கூரைநாடு கிராமத்தில் 1887-ல் பிறந்தவர் பி. கோவிந்தசாமி பிள்ளை. இவர், வெறும் 18 வயதில் வீட்டை விட்டு ஓடி, ஒரு கப்பலில் ஏறி 1905-ல் சிங்கப்பூரின் தஞ்சோங் பகார் துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்தார். சிங்கப்பூருக்கு வந்த புதிதில் வாழ்க்கை இவருக்கு சவாலாக இருந்தது. வேலை தேடி அலைந்து, 13 ரூபாய் மட்டுமே பையில் இருந்த நிலையில், உணவுக்கும் தங்க இடத்திற்கும் கஷ்டப்பட்டார்.
செரங்கூன் ரோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை கிடைத்தது. இந்த வேலைக்கு சம்பளம் இல்லை, ஆனால் உணவும் தங்குமிடமும் கிடைத்தது. அதிகாலையில் ஆரம்பித்து நள்ளிரவு வரை நீடிக்கும் இந்த வேலையில், கோவிந்தசாமி வணிகத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
மேலும் படிக்க – சிங்கப்பூரின் புகழ்பெற்ற PSA Marine-இல் வேலைவாய்ப்புகள்!
வாழ்க்கையில் முன்னேற பொறுமை மிகவும் அவசியம் என்பதை அன்றே புரிந்து கொண்ட கோவிந்தசாமி தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார். இறுதியில் அவரது முதலாளியின் அன்புக்கு பாத்திரமான அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நாட்கள் கடந்தது வெளிநாட்டில் சில காலம் வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டை மறவாது 1929ம் ஆண்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். கோவிந்தசாமி வெகு சில மாதங்களே அங்கு தங்கியிருந்த நிலையில் பக்கிரியம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார்.
அப்போது அவருக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி செய்தி தான் அவர் முதலாளியின் மறைவு. செய்வதறியாது திகைத்துப் போனார். எனினும் முதலாளியிடம் கற்ற அனைத்து விஷயங்களையும் கொண்டு தைரியமான ஒரு முடிவை எடுத்தார். அன்றைய சிங்கப்பூரில், வட்டிக்கு பணம் கொடுத்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களிடம் 2000 வெள்ளியைக் கடனாக பெற்று சொந்தமாக தொழில் தொடங்கினார். இதுவே பிஜிபி ஸ்டோர்ஸின் ஆரம்பமாக அமைந்தது.
எண்ணெய் வகைகள், தானியங்கள் மற்றும் மசாலா பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து தரமான விதத்தில் விற்பனையும் செய்தார். போட்டிகள் சில இருப்பினும் தனது அயராத உழைப்பின் காரணமாக மாவு, துணிக்கடை என்று புதிய கடைகளில் தனது முதலீடுகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.

வணிக சாம்ராஜ்யத்தின் உருவாக்கம்
கோவிந்தசாமி பிள்ளையின் வணிக பயணம் ஒரு சாதாரண மளிகைக் கடையில் இருந்து தொடங்கி, சிங்கப்பூர், மலாக்கா, மற்றும் ஜோகூர் பகாரு வரை பரவிய ஒரு பெரும் வணிக சாம்ராஜ்யமாக மாறியது. மசாலாப் பொருட்கள், எண்ணெய், மற்றும் தானியங்களை விற்ற இவரது கடை, பின்னர் புடவை மற்றும் ஜவுளி வணிகத்திற்கு விரிவடைந்தது. இவரது முதல் மகள் தனலட்சுமியின் பெயரை வைத்து மலாக்காவில் “தனலட்சுமி ஸ்டோர்ஸ்” என்று பெயரிட்டார், ஆனால் பின்னர் இவை அனைத்தும் பிஜிபி ஸ்டோர்ஸ் என்று மறுபெயரிடப்பட்டன.
செரங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, மற்றும் பஃபலோ ரோடு போன்ற இடங்களில் இவர் சொத்துக்களை வாங்கி முதலீடு செய்தார். இவரது கிராமமான கூரைநாடு, பட்டு புடவைகளுக்கு பிரபலமான இடமாக இருந்ததால், இவரது ஜவுளி வணிகம் தமிழ் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பு காரணமாக இவரது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஆனால், இவர் இந்தியாவில் இருந்ததால் பாதுகாப்பாக இருந்தார். 1945-ல் சிங்கப்பூர் திரும்பிய பிறகு, மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கி, தனது வணிகத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். 1963-ல், இவரது வணிகத்தின் மதிப்பு 3 மில்லியன் டாலராக இருந்தது, இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.
ஒரு மாமனிதர்
கோவிந்தசாமி பிள்ளை வெறும் தொழிலதிபர் மட்டுமல்ல, தாராள மனம் கொண்டவராக இருந்தார். இது சிங்கப்பூரின் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, மொத்த சமூகத்திற்கும் பயனளித்தது. 1952-ல், ராமகிருஷ்ண மிஷனின் புதிய கட்டடத்திற்கு நிலத்தையும், பணத்தையும் தானமாக அளித்தார். இந்த அமைப்பு, ஏழைகளுக்கு உணவு, மருத்துவம், மற்றும் கல்வி உதவி வழங்குவதில் புகழ்பெற்றது.
1970-களில், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் மறு கட்டுமானத்திற்கு 300,000 டாலர் தானமாக வழங்கினார். இந்தக் கோயிலின் பிரமாண்டமான ஐந்து அடுக்கு கோபுரம், இவரது தானத்தால் கட்டப்பட்டது, இது 1978-ல் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. மவுண்ட் ஆல்வர்னியா மருத்துவமனை மற்றும் மலாயா பல்கலைக்கழகத்திற்கும் இவர் தாராளமாக நன்கொடை அளித்தார். 1937-ல் இந்திய வர்த்தக சபையின் நிறுவன உறுப்பினராகவும், 1939-ல் “ஜஸ்டிஸ் ஆஃப் தி பீஸ்” என்ற பட்டத்தை பிரிட்டிஷ் அரசு வழங்கியதற்கும் இவரது சமூக சேவைகள் காரணமாக இருந்தன.
சிங்கப்பூர் நாணயத்தில் இவரது உருவம்: ஏன்?
2019-ல், சிங்கப்பூரின் 200-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், மோனட்டரி அத்தாரிட்டி ஆஃப் சிங்கப்பூர் (MAS) ஒரு சிறப்பு 20 டாலர் நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயத்தில், சிங்கப்பூரின் நாட்டு உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பு செய்த எட்டு முன்னோடிகளின் உருவங்கள் இடம்பெற்றன. இதில் கோவிந்தசாமி பிள்ளையும் ஒருவர். இந்த நாணயத்தின் முன்புறத்தில் சிங்கப்பூரின் முதல் குடியரசுத் தலைவர் யூசோஃப் இஷாக்கின் உருவமும், பின்புறத்தில் எட்டு முன்னோடிகளின் உருவங்களும், பழைய சிங்கப்பூர் ஆற்றின் பின்னணியில் இடம்பெற்றன. இந்த ஆறு, சிங்கப்பூரின் வர்த்தக மையமாகவும், பின்னர் நிதி மையமாகவும் மாறியதை குறிக்கிறது.
கோவிந்தசாமி பக்கிரி அம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்களும் நான்கு மகள்களும் இருந்தனர். சுமார் 30 லட்சம் சிங்கப்பூர் வெள்ளி அளவிற்கு அவர் விட்டுச்சென்ற தொழில் நிறுவனங்களை அவருடைய தலைமுறைகளால் சரியாக எடுத்து நடத்த முடியவில்லை என்றே கூறலாம். தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வந்து பல சாதனைகளைப் படைத்த கோவிந்தசுவாமி இறுதியில் 1980ல் தனது 92-வது வயதில் காலமானார்.