சிங்கப்பூரின் கெய்லாங் பஹ்ரு பகுதியில் உள்ள ஜலான் பெசார் டவுன் கவுன்சிலுக்கு அடுத்துள்ள ஒரு நடன ஸ்டுடியோவில் இன்று புதன்கிழமை (ஜூலை 28) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு காலை 6.30 மணியளவில் 70 A கெய்லாங் பஹ்ருவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அனுப்பப்பட்டது.
தகவல் அறிந்து உடனடியாக சம்ப இடத்திற்கு வந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர், “இரண்டு மாடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் தீ பரவியதை கண்டதாக” SCDF தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த வளாகத்தில் இருந்த டான்ஸ் ஸ்டுடியோவில் தான் தீ பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர், அந்த வளாகத்தை சுற்றி தண்ணீர் ஜெட்களை பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தவும், அது பரவாமல் தடுக்கவும் முயற்சித்தனர். தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவிகளை அணிந்து இரண்டாவது மாடிக்குச் சென்று தீயின் மூலத்தைக் கண்டறிந்தனர்.
இந்த சம்பவத்திற்கு சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 அவசர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த தீ அணைக்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.