TamilSaaga

ஒன்றல்ல.. ரெண்டல்ல.. 21 பிரம்படி.. பின்பக்கம் நஞ்சி சிதைஞ்சு போச்சு – முதன் முறையாக “சிங்கப்பூர் பிரம்படி” அனுபவம் சொன்ன “இரும்பு மனிதன்”! இத்தனை அடி வாங்கியும் Interview-ஆ!

தண்டனைகள் கடுமையாக இல்லாமல் போனால் என்னவாகும்?… “என்ன பண்ணிடப் போறாங்க?”-னு மனம் திமிரில் எகிறும். ‘தப்பு செய்யலாம்’ என்று எண்ணுவதற்கு கடுமையான தண்டனைகள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் தான்.

ஆனால், நம் சிங்கப்பூர் இதற்கு அப்பாற்பட்டது. இங்கு யாராவது தவறு செய்தால், நடு ரோட்டில் வைத்து தூக்கில் இடமாட்டார்கள். அல்லது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். ஆனால், சினிமா வசனம் போல, ‘அதுக்கும் மேல’ என்று சிங்கப்பூர் அளிக்கும் ‘பிரம்படி’ தண்டனையை விவரிக்கலாம்.

சிங்கப்பூரில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது, இந்த “பிரம்படி” நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் புருனே உட்பட வேறு சில முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளிலும் இதேபோன்ற உடல் ரீதியான தண்டனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசின் சட்ட திட்டங்களை மீறினாலோ, விதிமுறைகளை மீறினாலோ, அல்லது வேறு ஒழுங்கீனமான செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ இங்கு பிரம்படி உறுதி. சில வழக்குகளில் பிரம்படிக்கு மாற்றாக, லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தும் ஆப்ஷனையும் நீதிமன்றம் கொடுக்கும். நம்பமாட்டீங்க… 4 பிரம்படி வாங்குறதுக்கு பதிலா, 10 லட்சத்தைக் கூட அபராதமா கொடுக்க தயாரா இருப்பாங்க. அவ்வளவு உக்கிரமான தண்டனை இது.

இந்நிலையில், தான் வாங்கிய பிரம்படிகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஒருவர். சிங்கப்பூரில் பிரம்படி வாங்கிய ஒருவர், ஓப்பனாக வந்து பொதுவெளியில் தனது அனுபவம் குறித்து பகிர்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நபரின் பெயர் Graceson Ang. வயது 37. சிங்கப்பூரின் CNA மீடியா அவரிடம் இதுகுறித்து நேர்காணல் நடத்தியுள்ளது.

3 குழந்தைகளுக்கு தந்தையான Graceson Ang, ஆயுதங்களை கடத்திச் சென்றது, போதைப்பொருள் கடத்தல், கிரிமினல் மிரட்டல்கள் போன்ற குற்றங்களுக்காக ஆறு ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்தார். அப்போது தான் அவருக்கு 21 பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க – BIG BREAKING: அடுத்த 3 மாதத்திற்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை – வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பூர் நிறுவனத்துக்கு தடை!

இதுகுறித்து Ang கூறுகையில், “21 பிரம்படிகளால் எனது பின்பக்கத்தில் என்றுமே அழிக்க முடியாத தழும்பு ஏற்பட்டுவிட்டது. என்னால் 6 அல்லது 7 அடிகள் வரை வலியை தாங்கிக் கொள்ள முடிந்தது. இந்த 6,7 அடிகள் என்பதே மற்றவர்களால் தாங்கவே முடியாது. ஏதோ நான் அதை பொறுத்துக் கொண்டேன். 10வது அடி விழுந்த போது, இதற்கு மேல் வலியை தாங்கும் சக்தி உடலில் இல்லை என்பதை உணர்ந்தேன்.

11, 12வது அடியின் போது, எனது உடலில் ஒருவிதமான சூடு பரவியது. அதன் பிறகு விழுந்தா ஒவ்வொரு அடிக்கும் உணர்ச்சியற்றவனாக போனேன். உடனே உடனே அடித்திருந்தால் கூட தெரியாது… பிரம்படி அதிகாரி, கொடுக்கப்பட்ட 10 நிமிடங்கள் முழுவதையும் 21 அடிகளுக்கு பயன்படுத்த நினைத்தார். அதனால், ஒவ்வொரு அடிக்கும் இடையில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். இதனால், ஒவ்வொரு அடியின் வலியையும் நான் முழுமையாக உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

சரி… பிரம்படி எப்படி இருக்கும்?

மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சியை 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்கம்படி தயார் செய்து கொள்வார்கள். அந்த குச்சி உடையாமல் இருக்க, அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் அதேபோல், அடிபடும் இடத்தில் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும். தண்டனைக்குரிய நபரை முழு நிர்வாணமாக்கி மேலே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து, சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள்.

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் “ஜென்” நிலைக்கு சென்றுவிடுவார்கள். பேச்சு மூச்சு இருக்காது. அப்படி மயக்கம் அடைந்தாலும், 4 பிரம்படி என்றால், ஒவ்வொரு முறையும் மயக்கத்தை தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். சிங்கப்பூரில் மொத்தமாக 24 பிரம்படி வரை கொடுக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார். அதற்கும் மேல் சென்றால், 4 அடிக்கு மேல் வேறொரு அதிகாரி வந்து அடிப்பார். அதுக்காக சினிமாவில் வருவது போல், போற வர்ற போலீஸ்காரங்க எல்லாம் அடிக்க முடியாது. இதுக்கென்றே Caning Officers இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த பிரம்படி தண்டனையை கொடுக்க வேண்டும்.

உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே இந்த பிரம்படியின் விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே ஓங்கி அடிக்க வேண்டும். மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவரும் அங்கு உடன் இருப்பார்.

4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை (Buttocks) கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது. தசை எப்படி கிழியும் என்ற புகைப்படங்கள் இணையத்திலே இருக்கின்றன. கருப்புபணம் பதுக்கினால் 24 அடி விழும்.

“இரவில் தனியாக நடந்து சென்ற பெண் கற்பழிப்பு” என்ற கான்செப்ட்டே சிங்கப்பூரில் கிடையாது. காரணம், இந்த பிரம்படி கொடுக்கும் மரணபயம் தான். இந்த அடி தான் சிங்கப்பூரில் ரவுடித் தனம், திருட்டு, கொலை, கொள்ளை என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒரு ஆள், தான் செய்த தண்டனைக்காக 24 அடி வாங்கியுள்ளார் என்றால், வாழ் நாளில் அவரால் ஒழுங்காக திரும்ப நடக்கக் கூட முடியாது. இவ்வளவு ஏன்.. 24 அடியையும் வாங்கி மூச்சு இருந்தால் அதிசயம் தான்.

குறிப்பு: சிங்கப்பூரில் இந்த தண்டனை ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு கிடையாது

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts