TamilSaaga

முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் காலமானார்

தஞ்சை தரணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திரு. பூண்டி கி. அய்யாறு வாண்டையார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய மற்றும் மூத்த பிரமுகராக இருந்த பூண்டி கி. அய்யாறு வாண்டையார் அவர்கள் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1980ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் இணைந்து போட்டியிட்டார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றியும் பெற்றார்.

இதனை தொடர்ந்து சில நாட்கள் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் திகழ்ந்தார். அய்யாறு வாண்டையார் அவர்கள் தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகளில் கௌரவ பொறுப்புகளிலும் இருந்து வந்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இன்று தஞ்சாவூருக்கு கொண்டுவரப்படும் அவரது உடல் பூண்டி கிராமத்தில் மாலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Related posts