கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். பட்டதாரியான இவர் பெங்களூரு எலகங்கா பகுதியில் ரெடிமேடு துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
மஸ்கல் கிராமத்தின் அருகே உள்ள ஆரகல்லி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் சுஷ்மா. உறவினர்களான இருவரும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரது வீட்டாருக்கும் இவர்களது காதல் விஷயம் தெரியவர, அவர்களும் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.
இதனால் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதால் இருவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் தான் அந்த துயரச் சம்பவம் அரங்கேறியது. கடந்த 11ம் தேதி தனது துணிக்கடைக்கு சென்ற தனுஷ், பிறகு தனது கிராமத்தில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஊருக்கு திரும்பினார். பெங்களூரில் இருந்து தனக்கு சொந்தமான காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது நெடுஞ்சாலையில் இளமங்களா எனும் பகுதியில் அருகே அவர் வந்து கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில், எதிரே வந்த வாகனம் ஒன்று தனுஷின் கார் மீது பயங்கமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் உருண்டு விழுந்ததில், சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
அதேசமயம், விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர், தனுஷின் உடலைக் கைப்பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க, ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது.
அதேசமயம், கல்யாண கனவில் இருந்த சுஷ்மா, தனுஷ் இறப்பு செய்தியை கேட்டு கதறி அழுதார். அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை முடிந்த பிறகு, நண்பர்கள் புடைசூழ தனுஷ் உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தனுஷின் உடலை அடக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வந்தது.
தனுஷின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள சுஷ்மாவின் குடும்பத்தினர் கிளம்பிய போது, ‘தன்னால் தனுஷை இப்படியொரு நிலையில் பார்க்க முடியாது’ என்று சுஷ்மா மறுத்துவிட, அவரை விட்டுவிட்டு குடும்பத்தினர் மட்டும் கிளம்பிச் சென்றனர்.
ஆனால், தீராத துக்கத்தில் இருந்த சுஷ்மா ‘என்னையும் தனுஷோடு சேர்த்து வைத்துவிடுங்கள்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். பிறகு சுஷ்மாவின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தனுஷுக்கு அருகிலேயே சுஷ்மாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இருவரது இழப்பால் இரு வீட்டாரும் தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் உள்ளனர். காதலனின் மரணம் மிகவும் வேதனையான ஒன்று என்றாலும், தற்கொலை என்பது அதற்கு தீர்வாக அமையாது. இந்த துக்கமான நேரத்தில் சுஷ்மாவின் அருகே ஒரு நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.