வங்கியில் கொள்ளையடித்து மட்டுமல்லாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாங்காங்கில் Over Stayயில் இருந்த 73 வயது சிங்கப்பூர் நபர் மீது இன்று (ஏப்ரல் 18) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் நாதன் சாலையில் உள்ள ஒரு வங்கியில் கடந்த ஏப்ரல் 14 அன்று மாலை 3:30 மணியளவில் அந்த நபர் கொள்ளையடித்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் சுமார் HK$14,000 (S$2,429) பணத்தை எடுத்துச் சென்றதாக ஹாங்காங் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நபரை கைது செய்த பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த கவுலூன் மேற்கு பிராந்திய குற்றப்பிரிவின் கண்காணிப்பாளர் அலன் சிங், கைதான அந்த நபர் துப்பாக்கி ஒன்றை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டியதாக தெரிவித்தார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) அளித்த தகவலின்படி, அந்த நபர் Yau Ma Teiல் உள்ள சைனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கிக்கு சென்று அங்குள்ள ஒரு கவுண்டரில் இருந்த வங்கி ஊழியரிடம் ஒரு துண்டு காகிதத்தை கொடுத்துள்ளார். அந்த காகிதத்தில் நான் ஒரு திருடன் என்னிடம் ஒரு துப்பாக்கி உள்ளது என்று எழுதியுள்ளார்.
கையில் இருந்த துப்பாக்கியை காட்டியதும் அந்த ஊழியர் பயந்து பணத்தை கொடுத்துள்ளார், பணத்தைப் பெற்ற பிறகு, அந்த நபர் வங்கியை விட்டு வெளியேறி, மா ஆன் ஷனுக்குச் செல்லும் பொதுப் பேருந்தில் ஏறினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த வட்டாரம் முழுவதும் அவரை தேடும் பணி தொடங்கியது, இறுதியில் அந்த நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், கொள்ளைக்கு அவர் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பதை உறுதி செய்தனர். அவர் திருடிய பணம் மற்றும் வங்கியில் அவர் அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றையும் கண்டுபிடித்தனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாங் காங்கில் Over Stay செய்த குற்றத்திற்காகவும் வங்கியை கொள்ளையடித்த குற்றத்திற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். SCMP அளித்த தகவலின்படி அந்த நபர் வேலையில்லாமல் இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனில் இருப்பதாகவும் தெரிவித்தது.