மியன்மாரை மார்ச் 28 ஆம் தேதி உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்று வரும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த எந்திரக் கரப்பான்கள் (cyborg cockroaches) பங்கேற்று உதவி வருகின்றன. நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்தப்பட்ட உண்மையான கரப்பான்களான இவை, உலக அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 10 எந்திரக் கரப்பான்கள் மார்ச் 30 ஆம் தேதி மியன்மாருக்கு அனுப்பப்பட்டு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ‘ஆப்பரேஷன் லயன்ஹார்ட்’ (Operation Lionheart) படையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்த எந்திரக் கரப்பான்கள், உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (HTX), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் கிலாஸ் எஞ்சினியரிங் அண்ட் சல்யூஷன்ஸ் (Klass Engineering Solutions) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டவை.
மார்ச் 31 ஆம் தேதி முதன்முறையாக மியன்மாரில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இவை, ஏப்ரல் 3 ஆம் தேதி மியன்மார் தலைநகர் நேப்பிடோவில் இரண்டு முறை மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டன. இதுவரை உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியாவிட்டாலும், நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினருக்கு முக்கிய உதவியாக இருந்துள்ளன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மார்ச் 29 ஆம் தேதி 80 வீரர்கள் மற்றும் நான்கு தேடல் நாய்களைக் கொண்ட குழுவை மியன்மாருக்கு அனுப்பியது. மறுநாள், HTX-ன் குழு இணைந்து, எந்திரக் கரப்பான்களைப் பணியில் ஈடுபடுத்தியது. இக்குழுவில் HTX-ன் இரு பொறியாளர்களும், கிலாஸ் எஞ்சினியரிங் அண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரு பொறியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
“இது உலக அளவில் ஒரு புதிய முயற்சி. எந்திரக் கரப்பான்கள் மூலம் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முடியும் என நம்புகிறோம்,” என HTX-ன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 3,000-த்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட இந்த நிலநடுக்கத்தில், சிங்கப்பூரின் தொழில்நுட்ப உதவி மியன்மாருக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.