சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூர் அரசு தானியங்கி வாகனங்களை சோதனையோட்டம் செய்ததை நாம் அறிவோம். இந்நிலையில் நமது போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த தானியங்கி வாகனம் குறித்த சில தகவல்களை கூறியுள்ளது.
பொது போக்குவரத்துக்கு மேம்பாடு
சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது தீவு முழுவதும் ஆளில்லாமல் ஓட்டும் வாகனங்களை இயக்குவதற்கு சிங்கப்பூர் ஒரு பெரிய நகர்வை எடுத்து வைத்துள்ளது.
குறிப்பாக நகர மையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள வீட்டுவசதி வாரியங்களில் வசிப்பவர்களுக்கு, வேலைக்குச் செல்வதற்கான பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பொதுப் போக்குவரத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் அமைப்பாக அது இருக்கும் என்று கூறியுள்ளார் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோ.
மனிதவள குறைபாடு
மேலும் போக்குவரத்து அமைச்சர் பேசுகையில், “இது நமது நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் உள்ள ஒரு முக்கிய தடையான மனிதவள குறைபாட்டில் இருந்து ஒரு பெரிய ஆறுதலை தரும்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 11 அன்று, செய்தியாளர்களுடனான ஒரு விரிவான நேர்காணலில் பேசிய அவர் சிங்கப்பூரின் HDB எஸ்டேட்களுக்குள் நிலையான பாதைகளில் சிறிய திறன் கொண்ட ஓட்டுநர் இல்லாத வாகனங்களை பயன்படுத்துவதற்கான திட்டம் குறித்து விவரித்தார்.
மேலும் இந்த வழித்தடங்களை தேவைக்கேற்ப மாற்றலாம் என்றும் , சுயமாக இயக்கப்படும் மினிபஸ்கள் மற்றும் ஷட்டில்கள் மக்களை கூட்ட நெரிசல் உள்ள உச்ச நேரங்களில் போக்குவரத்து முனைகளுக்கு அழைத்துச் செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பாலிகிளினிக்குகள் அல்லது சமூக மையங்கள் போன்ற பிற இடங்களுக்கு மக்களை அவை அழைத்துச் செல்லும் என்றார் அவர்.
சிங்கப்பூரின் Long Term Visit Pass – இதை பெறும் வழிகள் என்ன? விரிவான பார்வை!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வேமோ ரோபோ டாக்சிஸ் எங்கும் பரவி வருவதையும், ஜூன் மாத இறுதியில் சீனாவில் உள்ள குவாங்சோவிற்குச் சென்று அங்கு சுயமாக ஓட்டும் வாகனங்களின் வளர்ச்சியைக் காண திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.