TamilSaaga

சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டால் இழப்பின்றி மீள்வது எப்படி? அதன் சாதக, பாதகம் என்ன? – Complete Report

சிங்கப்பூருக்கு பல்வேறு கனவுகளுடன் செல்பவர்கள் எந்த பிரச்சனையிலும் சிக்கி விடக் கூடாது என்பதற்கும், அப்படியே சிக்கினால் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதற்காகவே எழுதப்படும் கட்டுரை இது. (“இப்போ எங்கய்யா சிங்கப்பூருக்கு போக முடியுது.. நீங்க வேற”-னு நினைக்கும் உங்க மைண்ட் வாய்ஸும் கேட்கிறது). உலகம் இப்படியே இருந்து விடாது, வைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து நிச்சயம் உலகம் சகஜ நிலைக்கு திரும்புவது உறுதி. ஸோ, சிங்கப்பூரில் தற்போது பணிபுரிபவர்களுக்கும், இனிமேல் செல்பவர்களுக்கும் இந்த கட்டுரை நிச்சயம் தேவை என்பதில் சந்தேகமில்லை.

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தான் எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலைக்கு செல்ல முடியும். அந்த ஒப்பந்தத்தில் ஏகப்பட்ட “Terms and Conditions” இருக்கும். அந்த கண்டிஷன்ஸ் அனைத்தும் கையெழுத்து போடுவதற்கு முன்பாகவே நாம் தெளிவாக படித்து தெளிவு பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் என்னென்ன கட்டுப்பாடுகளுக்கு நாம் சம்மதித்து கையெழுத்து இடுகிறோம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தில், அந்த “Terms and Conditions” ஒப்பந்தத்தில் இருந்ததற்கு சம்பந்தமில்லாமல் ஏதாவது பிரச்சனைகள், தொந்தரவுகள் இருக்கும் பட்சத்தில், அந்த ஒப்பந்தத்தின் Copy-யை வைத்து நாம் Singapore Ministry Of Man Power-ஐ அணுக முடியும். அங்கு, Terms and Conditions-ஐ மீறி வேலையிடத்தில் இவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள் என்று புகார் கொடுக்க முடியும். Work Permit, S-Pass-ல் வேலைக்கு சென்றவர்கள் என அனைவரும் MOM-ஐ அணுக முடியும்.

மேலும் படிக்க – “இது செம Offer” – ஆனா பிப்ரவரி 15 முதல் மார்ச் 18 வரை தான்” : திருச்சி – சிங்கப்பூர் பயணம், அசத்தல் சலுகை தரும் Scoot

அதேசமயம், வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதற்கும், அதற்கான தீர்வை ஏற்படுத்துவதற்கும் பல அரசு சாரா அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன்களுக்காக இயங்குபவை. அவர்களின் ஊதிய பிரச்சனை, ஓவர் டைம் டார்ச்சர், இன்ன பிற சிக்கல்கள் என்று ஒவ்வொரு வகையான பிரச்சனைக்கும் ஒவ்வொரு வகையான அமைப்புகள் உள்ளன. இவ்வளவு ஏன்… MOM கூட இது போன்ற அமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளது. தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்புகளை MOM உருவாக்கியுள்ளது.

https://www.giving.sg/
https://www.mwc.org.sg/wps/portal/mwc/home

போன்ற அமைப்புகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க முன்வருகின்றன.

ஆனால், இதில் சிக்கல் என்னெவெனில், சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி, வேலைப் பார்க்கும் நிறுவனத்தை பகைத்துக் கொண்டால், அவர்கள் MOM-யிடம் அந்த தொழிலாளரை Hand Over செய்து விடுவார்கள். இது தான் அங்கு Basic நடைமுறை. “We are not handling this person. Please take him to MOM” என்று சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, Terms and Conditions ஒப்பந்தத்தில் கூட அந்நிறுவனம் மாற்றங்களை செய்துவிடலாம். அப்படி செய்தால், தவறே செய்யவில்லை என்றாலும் கூட, அந்த குறிப்பிட்ட தொழிலாளி வசமாக சிக்கவைக்கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு. மிக மிக அதிக வாய்ப்புகள் உண்டு.

ஏனெனில், எந்த நிறுவனமும், எந்த முதலாளியும், “ஆம்.. நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம். அந்த தொழிலாளி நியாயமாக நடந்து கொண்டார்” என்று சொல்லப் போவதில்லை. சிங்கப்பூர் அரசின் பார்வையில் இருந்து தப்பித்து கொள்ள அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் சொல்லப்போனால், ஒப்பந்தத்தில் காலை 8 டூ 5 தான் வேலை நேரம் என்று குறிப்பிட்டு அதில் நீங்கள் கையெழுத்திட்டு வேலைக்கு வந்திருப்பீர்கள். அதை காலை 8 டூ இரவு 8 என்று கூட நிறுவனங்களால் மாற்ற முடியும். அதுவும் உங்கள் கையெழுத்தோடு.. எப்படி என்கிறீர்களா? பொதுவாக சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் நிறுவனத்தில் பலமுறை தொழிலாளர்களிடம் வெவ்வேறு தருணங்களில், இதற்கு, அதற்கு என்று ஏகப்பட்ட கையெழுத்து வாங்கியிருப்பார்கள். எதற்கு போடுகிறோம் என்று தெரியாமல் இவர்களும் கையெழுத்து போடுவார்கள். இதுபோன்ற சிக்கலான தருணங்களில் அந்த கையெழுத்துக்களை பயன்படுத்தி, நீங்களே அசந்து போகும் வகையில் புது ஒப்பந்தத்தையே அவர்களால் உருவாக்கி விட முடியும்?

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் Hotel துறையில் வேலை” : மலேசியாவில் பணிபுரிந்தவர்கள் உடனடி தேவை – சம்பள விவரம் உள்ளே

பெரிய பெரிய Genuine நிறுவனங்கள் மட்டுமே, சிங்கப்பூர் அரசின் அனைத்து சட்ட திட்ட விதிகளையும் முறையாக கடைப்பிடித்து, வெளிநாட்டு தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்துவார்கள். அங்கே தொழிலாளிக்கும் – நிறுவனத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட எந்த முகாந்திரமும் இருக்காது. இத்தனை மணி நேரம் வேலை என்றால், அவ்வளவு தான் அங்கு வேலை. சொன்ன தேதிக்கு சம்பளம், வாழ்க்கைத் தரம் உயர்வு, புரமோஷன் என்றும் அனைத்தும் மிகச் சரியாக இருக்கும்.

சுருக்கமாக சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்

Tier 1,
Tier 2,
Tier 3

இதில், Tier 1 நிறுவனங்கள் MOM சட்ட திட்டங்களை ஒழுங்காக பின்பற்றி, வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் அக்கறை செலுத்துபவையாக இருக்கும்.

Tier 2 வகை நிறுவனங்களில், சொன்ன தேதிக்கு சம்பளம், சரியான வேலை நேரம் என்று தான் உண்டு, தன் நிறுவனம் உண்டு என்ற மோடில் இருக்கும். இங்கு பெரிதாக பிரச்சனைகள் இருக்காது. வேலைக்கு சென்றவர்கள் ஏதேனும் தவறான செயல்பாட்டிலோ, சட்டங்களை மீறும் விஷயத்திலோ ஈடுபட்டால் தான் சிக்கல் ஏற்படும்.

இந்த Tier 3 வகை நிறுவனங்கள் தான் பிரச்சனையே. அங்கு தான் சொன்னது ஒன்று.. செய்வது ஒன்று ஃபார்முலா இருக்கும். தொழிலாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையே அடிக்கடி முட்டல் மோதல்கள் இருக்கும். அரசு 2000 வெள்ளி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், இந்த வகை நிறுவனங்கள் 500 வெள்ளி தான் கொடுப்பார்கள். ஓவர் டைம் வேலைப் பார்த்தால் 100 வெள்ளி கிடைக்கும் என்று சொல்வார்கள், ஆனால் 50 வெள்ளி தான் கிடைக்கும். அரசுக்கு ஒரு ரெக்கார்டு, அலுவலகத்தில் இரு ரெக்கார்டு என்று தான் அவர்களது செயல்பாடே இருக்கும்.

மேலும் படிக்க – சீன புத்தாண்டு 2022: சிங்கப்பூரில் தமிழர்களுக்கு இணையாக ஆதிக்கம் செலுத்தும் சீனர்கள் – வியக்க வைக்கும் வரலாறு

ஆனால், உண்மையில் தலைவலி என்பது பிரச்சனையில் சிக்கும் அந்த குறிப்பிட்ட வெளிநாட்டு தொழிலாளிக்கு தான். இதனை சமாளித்து வருவது என்பது அத்தனை எளிதானது கிடையாது. ஏனெனில், விசா கட் ஆனது என்றால், அடுத்த 30 நாட்களின் விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுவிடும். ஆங்கே ஆதாரம் தான் பேசும். மிக வலிமையான ஆதாரம் உங்கள் கைகளில் இருந்தால் மட்டுமே, கோர்ட்டில் நீங்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக நிற்க முடியும். இல்லையெனில், Mishandling, Misuse, Illegal Activities, Sexual Harassment activities, Theft, Fake Documents என்று குறிப்பிட்ட தொழிலாளியின் மீது ஆயிரம் புகார்களை அந்த நிறுவனங்களால் சொல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால் நேற்று வரை இந்த பிரச்சனையில் உங்களுக்கு ஆதரவாக உங்கள் பக்கம் நின்ற, உங்கள் சக தொழிலாளர்களைக் கூட உங்களுக்கு எதிராக திருப்ப முடியும். ஆகையால், உங்கள் கையில் மிக மிக ஸ்ட்ராங்கான ஆதாரம் இல்லையெனில், நிலைமை படுமோசமாகிவிடும்.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக அமைப்புகள் இருந்தாலும், ஒருக்கட்டத்தில் அவர்களாலும் இதனை சமாளிக்க முடியவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்லிவிடுவார்கள். கடன் வாங்கி சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள், இத்தனை இன்னல்களை தாங்கி நிறுவனங்களுக்கு எதிராக நிற்பது என்பது உண்மையில் கடினமான விஷயம் தான். ஆனாலும், இங்கு முடியாது என்பது எதுவுமில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts