TamilSaaga

சிங்கப்பூரில் உள்ளூர் திறமைசாலிகள் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறார்களா 13 லட்சம் வெளிநாட்டு ஊழியர்கள்? – “சிங்கப்பூர் சிங்கப்பூரர்களுக்கே” கோஷம் எடுபடாமல் போனது ஏன்?

சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்…? உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்களா வெளிநாட்டினர்…? உள்ளூர்க்காரர்களில் ஒருதரப்பினர் வைக்கும் குற்றச்சாட்டு என்ன தெரியுமா…? இதையெல்லாம் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

சிங்கப்பூர்

தெற்காசியாவின் பிஸினஸ் ஹப் போன்று செயல்படும் நாடுகளில் முக்கியமானது சிங்கப்பூர். உலக அளவில் மிகப்பெரிய ஓப்பன் மார்க்கெட் எனப்படும் திறந்த சந்தையைக் கொண்ட நாடு. அதேபோல், எளிதாகத் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலிலும் முன்னணியில் இருக்கும் சிங்கப்பூர், ஊழல் குறைந்த நாடுகளுக்கான லிஸ்டிலும் 3-வது இடத்தில் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கெமிக்கல்ஸ் மற்றும் சேவைத் துறையே சிங்கப்பூரின் ஏற்றுமதியில் பெரும்பாங்காற்றுபவை.

அதேபோல், நிதி மேலாண்மைக்கு பெரும் முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் சிங்கப்பூர்தான். நிலப்பகுதி குறைவுதான் என்பதால், வேளாண் நடவடிக்கைகள் நவீன தொழில் நுட்பமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதன் அமைவிடம் காரணமாக உலக அளவில் பொருளாதாரரீதியாக முக்கியமான துறைமுகத்தைப் பெற்றிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், சிங்கப்பூரில் ஸ்டோர் செய்யப்பட்டு, இங்கிருந்து வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தெற்காசிய பொருளாதாரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் சிங்கப்பூர், உலக அளவில் வணிகம் – மொத்த உள்நாட்டு உற்பத்தி இடையிலான விகிதம் அதிகம் கொண்ட முக்கியமான நாடாகப் பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

உலகின் பெரும்பாலான நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியமாகிறது. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய ஓப்பன் மார்க்கெட்டைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். உற்பத்தித் துறை தொடங்கி சேவை துறை என சிங்கப்பூரின் வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது.

கட்டுமானத் துறை தொடங்கி பல்வேறு துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சிங்கப்பூர் நிறுவனங்கள் கணிசமாகப் பணியமர்த்தியிருக்கின்றன. கொரோனா சூழலால் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவோரின் எண்ணிக்கை குறைந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் அந்த எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நிதி மற்றும் வணிக நடவடிக்கைகளின் மையமாக சிங்கப்பூர் இருக்கிறது. கடந்த 2021 கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை, 5.07 மில்லியன். இதில், 1.3 மில்லியன், அதாவது 13 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக சிங்கப்பூர் வந்திருப்பவர்கள். குறிப்பாக, கட்டுமானத் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையே அதிகம் சார்ந்திருக்கின்றன சிங்கப்பூர் நிறுவனங்கள்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் – Pros and Cons

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில் நன்மைகளும் இருக்கின்றன. சில சிக்கல்களும் இருக்கின்றன. நன்மைகளைப் பார்த்தோமென்றால், குறைந்த ஊதியத்தில் அதிக அளவு பணி, நேரம் பார்க்காமல் உழைக்கும் தன்மை, அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் என்பதால், தனியாகப் பயிற்சி அளிக்க வேண்டியதில்லை. அதேபோல், உள்ளூர் தொழிலாளர்கள் பார்க்க விரும்பாத வேலைகளையும் செய்வார்கள், அவர்களின் சொந்த ஊரில் இருக்கும் வியாபாரத் தொடர்புகள் மூலம் நன்மை பெற முடியும் மற்றும் தொழிலாளர்களின் நாடுகள் சார்ந்து பல்வேறு பலன்களையும் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல், வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிக அளவில் பணியமர்த்துவதால் சில சிக்கல்களையும் எதிர்க்கொள்ள வேண்டி வரும் என்கிறார்கள் துறைசார்ந்த வல்லுநர்கள். இதில், மிகப்பெரிய சிக்கல், உள்ளூர் தொழிலாளர்களுக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது. இந்த விவகாரத்தை ஒருதரப்பினர் பல்வேறு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக எழுப்பி வருகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதால், எங்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அதேபோல், ஊதியமும் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. இது எங்கள் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது என்பது அவர்கள் வைக்கும் வாதமாகும். மேலும், அதிக அளவில் வெளிநாட்டினர் சிங்கப்பூரில் குடியேறுவதால், சொத்துகளின் விலை மட்டுமல்லாது, Cost of Living-க்கான செலவும் எக்கச்சமாக எகிறுகிறது என்றும் ஒருதரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

சிங்கப்பூர் சிங்கப்பூரியன்ஸுக்கே’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 4,000 பேர் கலந்துகொண்ட அமைதிப் பேரணி கடந்த 2013-ல் Speaker’s Corner பகுதியில் நடத்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனாலேயே, சிங்கப்பூரில் ஒருதரப்பினர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்றாலே வெறுப்படைகிறார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. வேலைவாய்ப்பில் வெளிநாட்டினருக்கே முன்னுரிமை என்றும் இதனால், உள்ளூர் திறமைசாலிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு சிலர் குற்றச்சாடை முன்வைத்து வருகிறார்கள்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, அதன் பொருளாதாரத்தை மேம்படுத்தவே. மாறாக, உள்ளூர் தொழிலாளர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்க அல்ல என்பதே அரசின் வாதம். அவர்கள் உங்களோடு இணைந்து போரிடுகிறார்களே தவிர, உங்களுக்கு எதிராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகில் பல்வேறு துறைகளில் சிறந்த வல்லுநர்கள், சிங்கப்பூர் வந்து நமக்காகப் பணியாற்றுவது நம் நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதோடு, பெருகிவரும் போட்டி சந்தையில் நம்மை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள உதவும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்

`யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பது தமிழின் முதுமொழி. உலகமே கைக்குள் அடங்கியிருக்கும் இன்றைய சூழலில், இந்த நிதர்சனத்தை நோக்கிதான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts