TamilSaaga

“சிங்கப்பூரில் பேருந்துகளின் பாதையில் சைக்கிள் ஓட்டிகள்” : போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சொல்வதென்ன?

சிங்கப்பூரில் உள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம், பேருந்துப் பாதைகளைப் பயன்படுத்தும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேசிய போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (NTWU) மூலம் அளிக்கப்பட்ட அந்த அறிக்கையில், பேருந்து இயக்கத்தில் இருக்கும் போது, ​​அந்த பாதையை சைக்கிள் ஓட்டுபவர்கள் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்தை இயக்கும் கேப்டன்கள், பேருந்து அதன் பாதையில் செயல்படும்போது சைக்கிள் ஓட்டுபவர்கள் ஜோடியாகவோ அல்லது மூன்று பேராகவோ சவாரி செய்வதைப் அடிக்கடி பார்ப்பதாக Feedback அளித்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து அமைச்சகம் (MOT) அக்டோபர் 20 அன்று சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான புதிய விதிகளை அறிவித்த சிறிது காலத்திலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமலில் உள்ள, ​​சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், சைக்கிள் ஓட்டுபவர்கள் பேருந்து வழித்தடங்களில் செயல்படும் நேரங்களில் பேருந்து பாதைகளை ஒருவர் மட்டுமே பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய விதிகள் தொடங்கும் போது, ​​சைக்கிள் ஓட்டுபவர்கள் பேருந்துப் பாதைகளில் ஒற்றை அணியில் சவாரி செய்யலாம், ஆனால் ஒரு வரிசையில் ஐந்து சைக்கிள் ஓட்டுபவர்களின் குழு அளவை விட அதிகமாக இருக்கக்கூடாது. 2020 ஆம் ஆண்டில் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட 572 போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படுகின்றது என்ற போக்குவரத்து காவல்துறை புள்ளிவிவரங்களை தொழிற்சங்கம் மேற்கோள் காட்டியது. இது கடந்த 2019-ல் 459 விபத்துகளிலிருந்து தற்போது 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆனால் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஒரே அணியில் பயணித்தாலும், பேருந்துகள் அவர்களை தவிர்க்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும், இது மற்ற சாலைப் பயணிகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது, அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு சில சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேருந்துகளின் சராசரி அகலம் 2.5 மீ, ஆனால் சாலைகளின் குறைந்தபட்ச அகலம் 3 மீ, இதன் விளைவாக பேருந்துகள் “சைக்கிள் ஓட்டுபவர்களை முந்திச் செல்ல அடுத்த பாதையில் அத்துமீறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என்றும் அந்த அறிக்கை விளக்கியது.

Related posts