சிங்கப்பூரில் உணவகங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே உணவு உண்ண முடியும் என்று அண்மையில் சிங்கப்பூர் அரசும் சுகாதார அமைச்சகமும் அறிவித்தது. இந்நிலையில் அக்டோபர் 20ம் தேதிக்கும் அக்டோபர் 26ம் தேதிக்கும் இடையில் உணவகங்களில் உணவு உண்டவர்களில் 38 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு இடைவெளி விதிகளை அவர்கள் மீறியதாகவும் சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
கண்டறியப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வாரியம் வெளியிடவில்லை. சிங்கப்பூரில் உணவகங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே உணவு உண்ண முடியும் என்ற செயல்திட்டம் கடந்த அக்டோபர் 13ம் தேதி தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி முழுமையாக போடாதவர்கள் பார்சல் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 12 மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிபோடப்பட்ட பாதுகாவலரோடு வரும்போது விலக்கு அளிக்கப்படுகிறது. இதனிடையே, உணவு உண்ணும் கடைகளில் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி முதல் கடந்த ஞாயிறு வரை பெருந்தொற்று தடுப்பு விதிகளை மீறிய 41 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாரியம் கூறியது.
நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு 5000ஐ கடந்த தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் குறைந்துள்ளது. மேலும் மக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே தொற்றின் அளவை முழுமையாக குறைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.