பொதுவாக விமானங்களில் பயணிக்கும் போது பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். பாதுகாப்பு, பயணிகளின் சுதந்திரம், தனி உரிமை என பல விஷயங்கள் இந்த கட்டுப்பாடுகளில் அடக்கம். அப்படி எல்லை மீறி கட்டுப்பாடுகளை தகர்க்கும் நபர்களுக்கு சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம். சிலருக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு விமானத்தில் பயணிக்க கூட தடை விதிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
ஆனால், இங்கு நடந்துள்ள ஒரு சம்பவத்தை குற்றம் என்ற குடைக்குள் அடைத்து விட முடியாது. மாபெரும் தவறு என்றும் கூற முடியாது. அதேசமயம், அதனை அனுமதிக்கவும் முடியாது.
விமானத்தில் நடுவானில் ஒருவர் தன் மதம் சார்ந்த வழிபாட்டுப் பாடலைப் பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த நபர் சிங்கப்பூரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து Mothership செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள “வீடியோவில், ஒரு இளைஞன் கிடார் வாசித்துக் கொண்டு, கிறிஸ்தவ வழிபாட்டுப் பாடலைப் பாடுவதைக் காண முடிகிறது.
அப்போது பயணிகளின் குழு ஒன்று எழுந்து நின்று, கைதட்டி அதே பாடலை ரசித்து பாடுகிறது. அதுமட்டுமின்றி, அந்த வீடியோ, “வானத்தில் 30,000 அடி உயரத்தில் இருந்து இயேசுவை வணங்குகிறேன்” என்ற தலைப்புடன் தான் வெளியிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது.
எனினும், ட்விட்டரில் இந்த வீடியோவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன.
பல பயனர்கள் இந்த நிகழ்வு பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்ததாக கூறியுள்ளனர், டிக்டாக் பயனர் ஒருவர், இதுபோன்ற செயல் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 30,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் அந்த பாடலை பாடியவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜொனாதன் நியோ என்று அடையாளம் காணப்பட்டார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அதே வீடியோவை வெளியிட்டார், அவரும் அவரது குழுவும் ஆறு மொழிகளில் அந்த பாடலை பாடியதாகக் கூறியுள்ளார். இவர் கிங்டம் ரியல்ம் மினிஸ்ட்ரீஸ் என்ற கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் பட்ஜெட் விமான நிறுவனமான EasyJet விமானத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு கேபின் Crew மற்றும் கேப்டனிடம் முன் அனுமதி பெற்று பாடியதாக ஜொனாதன் கூறியுள்ளார்.